நட்சத்திரத்தை சுற்றி வரும் புதிய கோளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..!

விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு அப்பாலும் பல்வேறு அதிசயங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன. அதில் புதிய கோள்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும், இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இதில், அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்த பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையில் என்ஜினீயர்களும், பொறியாளர்களும் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், சூரியனைப் போல் நட்சத்திரத்தை சுற்றி வரும் புதிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சூரியனை பூமி சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும். இதுபோல், சனிகிரக பாதைக்கு கீழும், நெட்டியூன் கிரக பாதைக்கு மேலும் இருக்க கூடிய நட்சத்திரத்தை புதிய கோள் ஒன்று சுற்றி வருவதை பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

நட்சத்திரத்தை சுற்றி வரும் இந்த கோள் பூமியின் எடையை போல் 27 மடங்கு பெரிதானது. பூமியின் ஆரத்தை போல 4 மடங்கு ஆரம் கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 1.2 மீட்டர் தொலை நோக்கியுடன் கூடிய மேம்பட்ட பி.எல்.ஆர். கருவியின் உதவியால் இந்த கோளின் எடையளவு துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று துல்லியமாக கிரகங்களின் எடையை கண்டறியும் இது போன்ற நிறமாலை கருவிகள் உலகில் ஒரு சிலதான் உள்ளது. இந்தியாவில் உள்ள இந்த பாரஸ் நிறமாலை கருவிதான் ஆசியாவிலேயே முதலாவது கருவியாகும்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் உருவாவதை அறிய இந்த கண்டுபிடிப்பு உதவும். இதன் மூலம் சூரிய குடும்பத்துக்கு அப்பாற்பட்டு நட்சத்திரங்களை சுற்றியுள்ள கோள்களை கண்டுபிடிக்கும் திறமையுள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!