ஃபேஸ்புக்கை இனி பறந்து கொண்டும் பயன்படுத்தலாம் – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!


இந்திய வான் எல்லைககளில் பறக்கும் விமான பயணிகள் விரைவில் தங்களது மொபைல் போன் அல்லது ஸ்மார்ட்போன்களை விமானத்தில் இருந்தபடி பயன்படுத்தலாம். இதற்கான அனுமதியை மத்திய டெலிகாம் துறை சமீபத்தில் வழங்கியுள்ளது.

அந்த வகையில் விமானத்தில் இருந்தபடி அழைப்புகளை மேற்கொள்வது, மின்னஞ்சல், ஃபேஸ்புக் போன்ற சேவைகள் மற்றும் யூடியூப் வீடியோ உள்ளிட்டவற்றை பறக்கும் போதே பார்த்து ரசிக்கலாம். இதுவரை விமானத்தில் கால் வைக்கும் போது பயணிகள் தங்களின் மொபைல் அல்லது ஸ்மார்ட்போன் போன்ற மின்சாதனங்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யக் கோரிய விமான நிறுவனங்கள் விரைவில் இவ்வாறான அறிவிப்புகளை வழங்காது.

இது எப்படி சாத்தியமாகிறது. இந்த தொழில்நுட்பம் குறித்த பலரின் பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

விமானத்தினுள் கனெக்டிவிட்டி என்றால் என்ன?

விமானத்தினுள் கனெக்டிவிட்டி (In-flight connectivity) சிஸ்டம்கள் பொதுவாக இருவித தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. முதலில் ஆன்போர்டு ஆன்டெனா தரையின் அருகாமையில் உள்ள டவரில் இருந்து சிக்னல்களை பெறும். தரையில் இருக்கும் டவர்களின் உதவியின்றி குறிப்பிட்ட கோணத்தில் விமானம் பறக்கும் வரை சீரான இணைப்பு கிடைக்கும்.

இரண்டாவதாக சாட்டிலைட்கள் மூலம் சிக்னல்கள் விமானத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஆன்டெனாக்களுக்கு நேரடியாக அனுப்பப்படும். இந்த வழிமுறை விமானம் தரையில் இருக்கும் நெட்வொர்க்களை விட தண்ணீரின் மேல் பறக்கும் போது சிறப்பாக வேலை செய்யும்.

அடுத்து என்ன நடக்கும்?

விமானத்தில் இருக்கும் ஆன்டெனாக்களுக்கு சிக்னல் கிடைக்க பெற்றதும், பயணிகளின் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் போன்ற மின்சாதனங்களுக்கு ரவுட்டர் மூலம் இன்டர்நெட் வசதி வழங்கப்படும். இந்த ரவுட்டர் விமானத்தில் உள்ள ஆன்டெனாவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

சாட்டிலைட்கள் உதவியுடன் ஆன்டெனா சிக்னல்களை தரையில் இருக்கும் மையத்திற்கு அனுப்பி, அங்கிருந்து மீண்டும் அவை பில்லிங் சர்வெர் மூலம் திருப்பியனுப்பப்படுகிறது. பில்லிங் சர்வெர் டேட்டா பயன்பாட்டு அளவை கணக்கிடும் வேலையை செய்கிறது.


ஒருவேளை இன்டர்நெட் இணைப்பு வைபை மூலம் வழங்கப்படும் பட்சத்தில் பயணிகள் தங்களது மின்சாதனங்களை இன்-ஃபிளைட் அல்லது ஏர்பிளேன் மோடில் வைத்து மட்டுமே பயன்படுத்த முடியும். இங்கு விமானத்தில் உள்ள ஆன்டெனாக்கள் டெலிகாம் சேவை நிறுவனங்களுடன் இணைந்து கொள்ளும்.

விமானம் தரையில் இருந்து 3000 அடி உயரத்திற்கு கிளம்பியதும், ஆன்டெனா சாட்டிலைட் சார்ந்த சேவைகளுக்கு மாற்றப்படும். இதனால் பல்வேறு நெட்வொர்க்களில் மாறும் போதும் சீரான இணைய வசதியை பயணிகளுக்கு வழங்க முடியும். இந்த சேவையை வழங்க விமான நிறுவனங்கள் இஸ்ரோ அல்லது வெளிநாட்டு சாட்டிலைட்களின் உதவியை நாடலாம்.

இதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

இந்த தொழில்நுட்பம் இயங்க விமான நிறுவங்கள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது சர்வெர் மற்றும் சாட்டிலைட் சிக்னல்களை டேட்டா பாக்கெட்களாக மாற்றும் உபகரணங்களை விமானத்தில் பொருத்த வேண்டும். இத்துடன் சீரான சேவையை வழங்குவதற்கு ஏற்ப உபகரணங்களை வைக்க வேண்டும்.

விமானம் ஒரு சாட்டிலைட்டில் இருந்து மற்றொன்றிற்கு மாறும் போது பொதுவாக இன்டர்நெட் இணைப்பு தடைப்படலாம். பொதுவாக தரையில் உள்ள வைபை சேவைகளை விட விமானத்தில் கிடைக்கும் வைபை வேகம் குறைவாகவே இருக்கும். எனினும் புதுவித தொழில்நுட்பங்களின் வரவு இந்த நிலையை மாற்றலாம்.


இதற்கான கட்டணம் அதிகமாகுமோ?

விமானத்தில் இன்ஸ்டால் செய்யப்படும் உபகரணங்களுக்கான அடிப்படை கட்டணங்களை விமான பயணிகள் ஏற்க வேண்டியிருக்கும். இதனால் விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களில் உபகரணங்களை இன்ஸ்டால் செய்வது எளிமையாக இருக்கும்.

இதுபோன்ற கூடுதல் கட்டணங்கள் விமான பயணச்சீட்டு கட்டணத்தில் சேர்க்கப்படலாம். விமானத்தில் உயர் ரக உபகரணங்களை இன்ஸ்டால் செய்வதால், குறைந்த கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.

இந்தியாவில் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த சேவையை இந்திய எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் ஏற்கனவே வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!