தனுசு ராசிக்காரர்களே…தொட்டது துலங்கும்.. விளம்பி தமிழ்ப்புத்தாண்டுப் பலன்கள்..!


இந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை தனுசு ராசிக்காரர்களின் ராசிநாதன் குருபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால், தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிதுர்வழிச் சொத்துகள் கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களுக்கு எதிராகத் திரும்பலாம்; கவனம் தேவை.

ஆனால், 4.10.2018 முதல் 12.3.2019 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால், எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். பணம், பொருள் சேர்ந்தாலும் செலவுகளும் துரத்தும். தகுந்த ஆதாரம் இல்லாமல் எவருக்கும் கடன் தர வேண்டாம். உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வது நல்லது. குறிப்பாக உணவு விஷயத்தில் கவனம் தேவை.

13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால், கோபம் அதிகரிக்கும். மன உளைச்சலுக்கும் ஆளாவீர்கள்.

வருடப் பிறப்பு முதல் 12.2.2019 வரை ராகு 8-ம் வீட்டிலும் கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால், கணவன் மனைவிக்கிடையே வீண் சந்தேகங்கள் வரும்; ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.

13.2.2019 முதல் வருடம் முடியும் வரை கேது ராசிக்குள் நுழைவதால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். ராகு 7-ல் நுழைவதால் வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் தேவைப்படும். பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.


இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால், எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சொந்தமாக வீடு வாங்குவீர்கள். எனினும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் அதிகம் உரிமை பாராட்ட வேண்டாம். சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள்.

30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள். சகோதர, சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

21.4.18 முதல் 14.5.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்னை தலைதூக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்கவேண்டி வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், செலவினங்கள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்து போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். வேலையாட்களை மாற்றுவீர்கள். வைகாசி, மாசி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் கூடும். புரட்டாசி மாதத்தில் புதிய பங்குதாரர்கள் இணைந்துகொள்வார்கள். பழைய சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பி-கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். வாகன உதிரிபாகங்கள், ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயமுண்டு.


உத்தியோகத்தில், இதுவரை நீங்கள் சந்தித்துவந்த அவமானங்கள் நீங்கும். மூத்த அதிகாரி உங்களுக்கு முன்னுரிமை தருவார். அவருடைய பூரண ஒத்துழைப்பால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் சில சிறப்புப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.

சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் உயரும். புதிய பொறுப்புகளும், சலுகைகளும் உங்களைத் தேடிவரும்.

மொத்தத்தில், விளம்பி வருடம் நீங்கள் தொட்ட காரியங்களிலெல்லாம் வெற்றிபெற வைத்து, சகல கோணங்களிலும் உங்களைச் சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்
திருவாரூர்- தியாகராஜர் கோயில் கீழவீதியில் அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயரை, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பகை தீரும்; வெற்றிகள் குவியும்.-Source: Vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!