மூன்று பேரின் உயிரை பறித்த பேஸ்புக் காதல்!

அசாம் மாநிலத்தில் லாக்டவுனில் மலர்ந்த காதல், மூன்று பேர் கொலையில் முடிந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலம் கவுஹாத்தி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் நஜிபூர் ரஹ்மான் போரா (25). மெக்கானிக்கல் இன்ஜினியரான இவருக்கும் கோலகாத் மாவட்டத்தை சேர்ந்த சங்கமித்ரா கோஷ் என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா லாக்டவுனில் இருந்த சமயம் அது. இருவரும் நேரில் சந்தித்தது இல்லை என்றாலும் இருவரது உறவு நட்பாக இருந்து பின்னர் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், இருவரும் அதே ஆண்டு அக்டோபர் மாதம் கொல்கத்தாவிற்கு தப்பிச் சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்துக் கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கமித்ராவின் பெற்றோர் சஞ்ஜீவ் கோஷ் மற்றும் ஜூனு கோஷ் சங்கமித்ராவை நஜிபூரிடம் இருந்து பிரித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் 2021ம் ஆண்டு, சஞ்ஜீவ் கோஷ் மற்றும் ஜூனு கோஷ் ஆகியோர் சங்கமித்ரா மீது திருட்டு குற்றச்சாட்டை சுமத்தி போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீசார் சங்கமித்ராவை கைது செய்தனர். ஒரு மாதம் நீதிமன்ற காவலில் இருந்த சங்கமித்ரா பின்னர் ஜாமினில் வெளியே வந்து பெற்றோர் வீட்டிற்கே திரும்பினார்.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் நஜிபூரும், சங்கமித்ராவும் வீட்டைவிட்டு தப்பி இம்முறை சென்னையில் தஞ்சம் புகுந்தனர். இங்கு இருவரும் 5 மாதங்கள் தங்கி இருந்த நிலையில், ஆகஸ்டு மாதம் கோலகாத் மாவட்டத்திற்கே இருவரும் திரும்பினர்.

அப்போது, சங்கமித்ரா கர்பிணியாக இருந்தார். நஜிபூர் வீட்டில் தங்கி இருந்த நிலையில், சங்கமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

நான்கு மாதங்கள் கழித்து நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால், சங்கமித்ரா தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும், தன்னை அடித்து துன்புறுத்துவதாக நஜிபூர் மீது சங்கமித்ரா போலீசில் புகார் தெரிவித்தார்.

கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட நஜீபூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 28 நாட்களுக்கு பிறகு நஜிபூர் ஜாமினில் வெளியே வந்ததை அடுத்து, தனது குழந்தையை பார்ப்பதற்காக சங்கமித்ராவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால், சங்கமித்ரா குழந்தையை சந்திக்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து, ஏப்ரல் 29ம் தேதி அன்று நஜிபூரை அடித்து துன்புறுத்தியதாக அவரது சகோதரர், சங்கமித்ரா மற்றும் சங்கமித்ராவின் பெற்றோர் மீது போலீசில் புகார் தெரிவத்தார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று இருதரப்பினரிடையே பிரச்சினை முற்றியது. இதில், ஆத்திரமடைந்த நஜிபூர் சங்கமித்ரா, மற்றும் அவரது பெற்றோர் சஞ்ஜீவ் கோஷ், ஜூனு கோஷ் என மூன்று பேரையும் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பின்னர், குழந்தையை தூக்கிக் கொண்டு சென்ற நிஜபூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். மூன்று பேரை கொலை செய்த நிலையில், நிஜபூர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கொடூர கொலையை விசாரிக்க மாநில சிஐடி குழு நியமிக்கப்பட்டுள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!