ஒரு இலை கூட உதிராமல் பராமரிக்கப்படும் விவிஐபி மரம்!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சல்மத்பூரில் உயர் தர மரம் ஒன்றிற்கு மாநில அரசு ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் செலவு செய்து பராமரித்து வருகிறது.

இந்தியாவின் முதல் விவிஐபி மரம் என்று அழைக்கப்படும் பீப்பல் மரம் மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலுக்கும் விதிஷா நகரத்திற்கும் இடையில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சாஞ்சி புத்த வளாகத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த மரத்தின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் 4 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உயர்தர அழகிய நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த மரத்தில் இருந்து ஒரு இலை கூட காய்ந்துவிடாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.

மரம் அமைந்துள்ள குன்று சாஞ்சி புத்த பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முழுப் பகுதியும் பௌத்த தளமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது.

புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்த மரம் இங்கு நடப்பட்டது. இந்த மரத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று பார்க்கலாம்.

அப்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவினால் அந்நாட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட மரக்கன்று ஒன்றிலிருந்து பீப்பல் மரம் நடப்பட்டது. இது, கௌதம புத்தர் ஞானம் அடைந்ததாகச் சொன்ன அதே போதி மரத்துக்குச் சொந்தமானது.

இதுகுறித்து, புத்த மத போதகர் சந்திரரதன் கூறுகையில், “புத்தர், போதகயாவில் உள்ள போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றார். பேரரசர் அசோகரின் மகள் சங்கமித்ராவால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது.

இதே மரத்தின் ஒரு பகுதி தான் சாஞ்சி பௌத்த பல்கலைக்கழக நிலத்தில் நடப்பட்டுள்ளது” என்றார். இந்த மரம் 15 அடி உயர இரும்பு வலைக்குள் வைக்கப்பட்டுள்ளது. “இந்த புனித மரம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

எந்த பண்டிகை இருந்தாலும் பராமரிப்புக்கு விடுமுறை இல்லை,” என்று மரத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட பாதுகாவலர் ராகுல் தம்னோடியா கூறினார்.

மேலும், மரத்தை பாதுகாக்கும் பணிக்காக ஒரு காவலாளிக்கு மாதம் ரூ.26,000 சம்பளம் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு பாதுகாவலர்கள் மரத்தின் பாதுகாப்பு கருவியாக இருப்பதால், மாத பாதுகாப்பு செலவு ரூ. 1,04,000 ஆக இருக்கிறது.

ஒரு ஆண்டு முழுவதும், மரத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிகாரிகள் ரூ. 12.48 லட்சம் செலவிடுகின்றனர். அதன் பாசனத்திற்காக, சாஞ்சி நகராட்சி தனி தண்ணீர் டேங்கர் ஏற்பாடு செய்துள்ளது.

மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில், வேளாண்மைத் துறை அலுவலர்கள் வாரந்தோறும் இங்கு வந்து மரத்தை நோய் தாக்காமல் பாதுகாத்து வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!