தோழியின் திருமண வரவேற்பில் நடனமாடிய என்ஜினீயர் திடீர் சாவு!

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிபிரசாத் (வயது 21). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவருடன் அதே நிறுவனத்தில் வேலை செய்துவரும் பெண் தோழி ஒருவருக்கு சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

முன்னதாக இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணிபிரசாத் மற்றும் உடன் வேலை செய்யும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது, அங்கு இசைக்கப்பட்ட பாடலுக்கு ஏற்ப மணிபிரசாத் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடினார். திடீரென மணிபிரசாத், மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்களான சியாம், பரத் ஆகியோர் மணிபிரசாத்தை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிபிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு அவரது நண்பர்கள் கதறி அழுதனர்.

இதுபற்றி நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மணிபிரசாத்தின் திடீர் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!