தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா..?

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்நிலையில், இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடும் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார்.

இந்த அணியில் இந்திய அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார். சமீபத்தில் வங்காள்தேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் சிறப்பாக செயல்படவில்லை.

ஆனால் அதே தொடரில் தவானுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இஷன் கிஷன் அதிரடியாக இரட்டை சதம் அடித்து அசத்தினார். குறைந்த பந்தில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

அதனால் தேர்வாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார் இஷன். மேலும், சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இனிமேல் இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 37 வயதான ஷிகர் தவான் இந்திய அணிக்காக சாமீபகாலமாக ஒருநாள் அணியில் மட்டும் இடம் பிடித்து வந்தார்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஒருநாள் உலககோப்பை நடைபெற உள்ளதால் அந்த தொடரில் விளையாட தவான் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

கடந்த டி20 உலககோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் அடைந்த படுதோல்வியை அடுத்து இந்திய அணியில் இளம் வீரர்களுக்கும், அதிரடி ஆட்டக்காரர்களுக்கும் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன. டி20 அணிக்கு பாண்ட்யாவை நிரந்தர கேப்டனாக்க வேண்டும் என்றும் குரல்கள் வந்தன. ஆனால் அது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

அதன் ஒரு பகுதியாக தான் இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் இடம் பிடிக்கவில்லை என தெரிகிறது. இந்திய அணியில் தற்போது இஷன் கிஷன், சுப்மன் கில், ரோகித், ராகுல், கெய்க்வாட் ஆகிய தொடக்க ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

சஞ்சு சாம்சன், விராட் கோலி ஆகியோர் தேவைப்பட்டால் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. 37 வயதான ஷிகர் தவான் இந்திய அணிக்காக இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2,315 ரன்னும், 167 ஒருநாள் போட்டிகளில் ஆடி 17 சதத்துடன் 6,793 ரன்னும், 68 டி20 போட்டிகளில் ஆடி 1,759 ரன்னும் எடுத்துள்ளார்.

இலங்கை தொடருக்கான இந்திய 20 ஓவர் அணி: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ்குமார்.

இந்திய ஒரு நாள் போட்டி அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப்சிங்.-News & image Credit: mdailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!