தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்ற கணவன் – அதிர்ச்சி காரணம்!

நடத்தை சந்தேகத்தில் மனைவியை தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா அனப்பத்தூர் ரோடு தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(27).

இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது எதிர்வீட்டைச் சேர்ந்த கவுசல்யா(23) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.

கவுசல்யா செய்யாறு சிப்காட் ஷூ தொழிற்சாலையின் தொழிலாளி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், ரஞ்சித் மனைவியின் நடத்தையில் சந்தேகப்படுவாராம். இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்வாராம். அப்போது, உறவினர்கள் சமாதானம் செய்துள்ளனர். மேலும் ரஞ்சித்தின் பெற்றோர் ராஜா, சாந்தி மற்றும் சகோதரர் விநாயகம் ஆகியோர் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


கடந்த சில வாரங்களுக்கு முன்பு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அனக்காவூர் போலீசில் கவுசல்யா புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ரஞ்சித்தை எச்சரித்து ஒழுங்காக குடும்பம் நடத்த அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் மனைவி மீது சந்தேகம் அடைந்த ரஞ்சித் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த ரஞ்சித் கவுசல்யாவின் கழுத்தை அவரது தாலி கயிற்றாலும், துப்பட்டாவாலும் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தனது ஒன்றரை வயது மகன் கபிலேஷை தூக்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.


இதுகுறித்து தகவல் அறிந்த அனக்காவூர் போலீசார் விரைந்து சென்று கவுசல்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கவுசல்யாவின் தாயார் செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரஞ்சித் மற்றும் அவரது பெற்றோர், சகோதரரை தேடி வருகின்றனர்.

திருமணமான 2 ஆண்டில் காதல் மனைவியை தாலிக்கயிற்றால் கழுத்து இறுக்கி கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!