மன அழுத்தத்தினால் ஏற்படும் அறிகுறிகளும்.. விரட்டும் வழிமுறைகளும்!

முக்கிய முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அதனை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பார்கள். சட்டென்று பின்வாங்க மாட்டார்கள்.

திட்டமிட்டபடி செயல்பட முடியாத சூழலின்போதும், எதிர்பாராத நிகழ்வுகள் மனதை உலுக்கும்போதும் மன அழுத்தம் ஆட்கொண்டுவிடும். எப்போதாவது மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

அதில் இருந்து விரைவாக மீண்டுவிட்டால் பிரச்சினை இல்லை. அடிக்கடியோ, தொடர்ந்தோ மன அழுத்தத்திற்கு ஆளானால் மன ஆரோக்கியம் மட்டுமின்றி உடல் நலனும் பாதிப்புக்குள்ளாகும். ஆரம்ப நிலையிலேயே மன அழுத்தத்திற்கு வித்திடும் அறிகுறிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.

1. உடல் வலி மன அழுத்தம் தசைகளை பாதிக்கும். மன அழுத்தம் நாள்கணக்கில் நீடிக்கும்போது தசைகளில் வலியை உண்டாக்கும். அதனால் உடல் முழுவதும் வலி, சோர்வு ஏற்படும்.

2. தலைவலி மன அழுத்தத்தின் தாக்கமாக ஏற்படும் பாதிப்பை நீக்க மூளைக்கு சமிக்ஞை அனுப்பப்படும். அதற்கேற்ப மூளையின் செயல்பாடுகள் தூண்டப்படும். மன அழுத்தம் நீடிக்கும்போது கழுத்து மற்றும் உச்சந்தலையில் வலி ஏற்படக்கூடும். கடும் தலைவலியையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

3. செரிமானத்தில் சிக்கல் மன அழுத்தத்தில் இருக்கும்போது சாப்பிடும் வழக்கத்தில் மாறுதல் ஏற்படும். சிலர் குறைவாக சாப்பிடுவார்கள். சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். ஊட்டச்சத்து இல்லாத உணவுகளையும் உட்கொள்வார்கள். இத்தகைய சீரற்ற உணவுப்பழக்கம் அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

4.படபடப்பு மன அழுத்தம் பெரும்பாலும் இதய துடிப்பை வேகப்படுத்திவிடும். இதனால் முக்கிய உறுப்பு களுக்கு வழக்கத்தை விட விரைவாக ரத்தம் சென்றுவிடும். அதன் காரணமாக பதற்றம், படபடப்பு ஏற்படும்.

5. தூக்கத்தில் இடையூறு மனதை பாதிக்கும் சம்பவம் நடக்கும்போது அமைதியாக இருக்க முடியாது. அமைதியின்மை தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். சரியாக தூங்க முடியாது. கண்களை மூடி இருந்தாலும் நடந்த விஷயத்தையே மனம் நினைத்து பார்த்துக்கொண்டிருப்பதால் தூக்கம் தடைபடும்.

6. உடல் எடை அதிகரிக்கும் அல்லது குறையும் மன அழுத்தம் ஹார்மோன்களின் செயல்பாடுகளை பாதிக்கும். அதனால் உடல் எடையில் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். பசி மற்றும் வளர்சிதை மாற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

7.நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும் நீண்ட கால மன அழுத்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை பலவீனப்படுத்தும். இதனால் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

8. சுவாசத்தில் மாற்றம் உண்டாகும் மன அழுத்தத்தில் இருக்கும்போது, சுவாசத்தில் இடையூறு ஏற்படும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படக் கூடும். இதனை சமாளிக்க மூச்சை நன்றாக உள் இழுத்து வேகமாக வெளியே விட்டு சுவாசிக்கலாம்.

9. நீரிழிவுக்கு வழிவகுக்கும் மன அழுத்தத்தின்போது கல்லீரலில் இருந்து கூடுதல் குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் கலக்கக்கூடும். அதனை கட்டுப்படுத்தாவிட்டால் டைப்-2 நீரிழிவுக்கு வழிவகுத்துவிடும்.

10. கருவுறுதலில் பிரச்சினை ஏற்படும் மன அழுத்தம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் இனப்பெருக்க செயல்பாட்டிலும் பாதிப்பை உண்டாக்கும். இதனால் கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!