பொய்க்கால் குதிரை திரைவிமர்சனம்!

விபத்தில் மனைவியையும் இடது காலின் முட்டிக்குக் கீழ் உள்ள பகுதியையும் இழந்து மகளோடு வாழும் பிரபுதேவாவுக்கு காப்புறுதி நிவாரணப் பணம் வருகிறது.

அதை வைத்து மகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க அவர் திட்டமிட, மகளோ அப்பாவுக்கு செயற்கைக் கால் வாங்க வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறாள். காலும் வந்து விட , மகளுக்கு உயிராபத்து நோய் ஒன்று இருப்பதும் அவளைக் காக்க லட்சக் கணக்கில் பணம் தேவை என்ற நிலையும் வருகிறது.

இந்த சூழலில் ஒரு பிரபல தொழில் அதிபரின் மகளை கடத்தி, பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார் பிரபு தேவா. ஆனால், கடத்தல் சமயத்தில் குழந்தையை வேறொரு நபர் கடத்தி விடுகின்றனர். கடத்தல் முயற்சியில் பிரபு தேவா சிக்கிக்கொள்கிறார். இறுதியில் கடத்தல் பிரச்சனையில் இருந்து மீண்டாரா? தன் குழந்தையை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் துவக்கத்தில் அட்டகாசமான ஒற்றைக்கால் நடனப் பாட்டில் முத்திரை பதிக்கிறார் பிரபுதேவா. சென்டிமென்ட் காட்சிகளில் உணர்ச்சிகரமாக நடித்து அசத்தி இருக்கிறார். தோற்றம் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் சிறுமி ஆழியா. நாயகனுக்குப் பொய்க்காலோ, செயற்கைக்காலோ தேவைப்படாத கதை என்ற போதும், ‘விபத்தில் ஒரு கால் போனபோது ஊனமாக உணரவில்லை.

ஆனா மகளைக் காப்பாற்ற முடியாதோ என நினைக்கும் போது ஒரு தந்தையாக ஊனமாக உணர்கிறேன்’ என்ற வசனத்தின் மூலம் ஒரு நியாயத்தைக் கற்பித்துள்ளார் இயக்குனர்.

உடல் உறுப்புகளுக்காக குழந்தைகள் கடத்தல் என்ற விழிப்புணர்வு விசயத்துக்கு இயக்குனரை பாராட்டலாம். இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பல்லுவின் ஒளிப்பதிவும் சிறப்பு. மொத்தத்தில் ‘பொய்க்கால் குதிரை’ சிறப்பான ஆட்டம் .News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!