இடுப்பில் 3 குழந்தைகளையும் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த தாய்!

வாணாபுரம் அருகே உள்ள சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா (27). இவர்களது மகன்கள் நிலவரசு (5), குறளரசு (4). மகள் யாஷினி (7 மாதம்). இதில் நிலவரசு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மதியம் அமுதா தனது மகன்களான நிலவரசு, குறளரசு மற்றும் 7 மாத கைக்குழந்தையான யாஷினி ஆகிய மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு தென்பெண்ணை ஆற்றின் கரைக்கு வந்தார். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்று கொண்டிருந்தது. அங்கு அமுதா திடீரென தனது 3 குழந்தைகளையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றுக்குள் குதித்தார்.

பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் 3 குழந்தைகளும், அமுதாவும் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில் 3 குழந்தைகளும் பரிதாபமாக இறந்து விட்டனர். அமுதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 3 குழந்தைகளின் உடலையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த வாணாபுரம் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் 3 குழந்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தைகள் இறந்த பரிதாபம் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரமேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அமுதா குடும்ப தகராறு காரணமாக 3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்தாரா? அல்லது வறுமை காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமுதா சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நினைவு திரும்பிய பின்னர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 3 குழந்தைகள் இறந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!