தமிழர்களின் கழுத்தை அறுப்போம் என மிரட்டிய இலங்கை ராணுவ அதிகாரி சஸ்பெண்ட்..!


இலங்கை சுதந்திர தினம் பிப்ரவரி 4-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி லண்டனில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனில் உள்ள இலங்கை மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அப்போது அங்கு இலங்கை அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்திக் கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2009 ஆம் ஆண்டில் இலங்கை உள்நாட்டுப் போரில் நடந்த இன அழிப்பு குறித்தும் தற்போது தமிழர்களின் பகுதியில் உள்ள இலங்கையின் ரகசிய ராணுவ முகாம்களுக்கும் கண்டனம் தெரிவித்து பலர் குரல் எழும்பினர்.


அப்போது இலங்கை தூதரக அதிகாரிகளுடன் இலங்கை ராணுவ உடையுடன் நின்று கொண்டிருந்த அதிகாரி ஒருவர் இலங்கை தமிழர்களை நோக்கி கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் சைகை விடுத்தார். கழுத்தை அறுப்போம் என்பது போன்ற சைகையை அவர் தெரிவித்தார்.

இலங்கை ராணுவ அதிகாரியின் இந்த செய்கைக்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், பிரியங்கா பெர்னாண்டோ என்ற அந்த அதிகாரி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பிரியங்கா பெர்னாண்டோ இலங்கை ராணுவத்தின் பிரிகேடியராக பணியாற்றியவர். தற்போது அவர் தூதரக ஆலோசகராக லண்டனில் பணியாற்றி வந்தார்.-Source: maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி