சாலையின் குறுக்கே திடீரென விழுந்த மரம் – பெண் வங்கி அதிகாரி உடல் நசுங்கி பலி!

சென்னை போரூர் மங்கலம் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் கபிலன். இவருடைய மனைவி வாணி (வயது 57). இவர், கே.கே. நகரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

வாணி, நேற்று மாலை அவரது தங்கை எழிலரசியுடன் காரில் லட்சுமணசாமி சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை வரும் வழியில் இருக்கும் தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையையொட்டி இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு சாலையின் குறுக்கே சாய்ந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த காரின் மீது மரம் விழுந்தது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அசோக் நகர், கிண்டி தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே வாணி, மரம் விழுந்ததில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த டிரைவர் கார்த்திக்கும், வாணியின் தங்கை எழிலரசியும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!