வீட்டு மாடியில் தூங்கிய தந்தை… மகன் செய்த வெறிச்செயல்.!

ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டு மாடியில் தூங்கிய தந்தை சரமாரியாக வெட்டி கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 45). இவர் ஸ்ரீபெரும்புதூர் ஆண்கள் உயர்நிலை பள்ளி அருகே சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் தினேஷ் (20), என்ற மகனும் திவ்யா (15), என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி ரேணுகா அருகே உள்ள சிப்காட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் ராமுவின் மகன் தினேஷ் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலைக்கு போகாமல் குடிபோதைக்கு அடிமையாக ஊர் சுற்றி வந்து உள்ளான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு காணாமல் போன தினேஷ் சென்ற வருடம் தான் மேல்மருவத்தூர் அருகே அவனைப் பார்த்து குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

மேலும் தினேஷின் குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் கடந்த மாதம் தினேசை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ் 3 நாளுக்கு முன்பு தான் வீட்டிற்கு வந்துள்ளான். மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த நாள் முதல் வீட்டிலிருந்தபடியே மதுகுடிக்க பணம் கேட்டு பெற்றோர்களிடம் சண்டையிட்டு வந்துள்ளான்.

இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் தினேஷ் குடிக்க பணம் கேட்டு சண்டையிட்டுள்ளான். தினேஷின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டு மாடியில் உறங்க சென்றுள்ளார் ராமு. நேற்று இரவு மின்சாரம் இல்லாததால் ராமு அவரது மனைவி ரேணுகாவும் மாடியில் சென்று தூங்கினர்.

அதிகாலை மின்சாரம் வந்துவிட்டதாக தனது தாயை கீழே அனுப்பியுள்ளான் தினேஷ். தாய் ரேணுகா கீழே சென்ற சில நேரத்தில் தூங்கி கொண்டிருந்த தனது தந்தை ராமுவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளான் தினேஷ். கணவரின் அலறல் சத்தத்தை கேட்டு ரேணுகா ஓடிவந்து மேலே பார்க்கையில் கணவர் ராமு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

தாயை கண்டவுடன் தினேஷ் அங்கிருந்து தப்ப ஓடினான். உயிருக்கு போராடிய ராமுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ராமு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விசாரணை மேற்கொண்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தினேஷை தேடி வருகின்றனர். பெற்ற மகனே தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!