வழி தவறிய என்ஜினீயர்… 500 அடி பள்ளத்தில் உடல் மீட்பு!

லோனாவாலாவிற்கு சுற்றுலா வந்த டெல்லி என்ஜினீயர் 500 அடி பள்ளத்தாக்கில் பிணமாக கிடந்தார். உடலை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

டெல்லியை சேர்ந்தவர் பர்கான் சிராஜூதின்(வயது24). என்ஜினீயரான இவர், அண்மையில் புனேயில் இருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள மலைவாசஸ்தலமான லோனாவாலா பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தார். இயற்கை காட்சிகளை ரசித்த படியே சென்ற அவர் மலையேற்ற வீரர்கள் ஏறும் பகுதியான டுக் நோஸ் என்ற இடத்திற்கு வந்தார்.

பின்னர் தான் வந்த வழியை தவறவிட்டதால் திரும்ப முடியாமல் தவித்தார். இதற்கிடையே டெல்லியில் இருந்த பெற்றோர் பர்கான் சிராஜிதீனை தொடர்பு கொள்ள முயன்றனர். இதில் முடியாமல் போனதால் அவரை தேடி கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

தகவல் அறிந்த அவரது நண்பர் தொடர்பு கொள்ள முயன்ற போது முடியாமல் போனதால் சம்பவம் குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ஐ.என்.எஸ். சிவாஜி கடற்படை, புனே ஊரக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதன்படி அவர்கள் அங்கு வந்து செல்போன் சிக்னல் மூலமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 3 நாட்களாக தேடி வந்த நிலையில் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் டிரோன் மூலம் தேடி வந்த நிலையில் டுக் நோஸ் பாயிண்ட் பகுதியின் 500 அடி பள்ளத்தாக்கில் பர்கான் சிராஜிதீன் பிணமாக கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!