செல்லமாக வளர்த்த பொம்மிக்கு கல்லறை கட்டிய குடும்பத்தினர்!

களக்காடு அருகே குடும்பத்தில் ஒருவனாக வளர்ந்த நாய் வயது முதிர்வால் உயிரிழந்ததையடுத்து குடும்பத்தினர் சொந்த நிலத்தில் கல்லறை கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (56). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலெட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த தம்பதியினர் அவர்கள் வீட்டில் கிளி, புறா உள்ளிட்ட பறவைகளும், மீன்களும் வளர்த்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வந்த பொமோரியன் வகை நாயையும் கடந்த 2009-ம் ஆண்டு முதல் தங்களது குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வந்தனர். அந்த நாய்க்கு பொம்மி என்ற பெயர் சூட்டி, கடந்த 13 ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர்.

பொம்மி 3 குட்டிகள் ஈன்றது. அதில் ஒரு குட்டியை எடுத்து அதற்கும் ‘குட்டி’ என்றே பெயர் சூட்டி இரு நாய்களையும் குழந்தைகள் போல் பாசத்தை கொட்டி வளர்த்து வந்தனர். மற்ற 2 குட்டிகளையும் நண்பர்களுக்கு வழங்கி விட்டனர்.

இந்நிலையில் பொம்மி நாய்க்கு கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்தி அதற்கு வேளைக்கு வேளை உணவு மற்றும் சத்து பொருட்கள் வழங்கி கவனித்து வந்தனர்.

கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையும் அளித்து வந்தனர். இதனிடையே பொம்மி நாய் நேற்று உயிரிழந்தது. இதையடுத்து ஆறுமுகநயினார் அவரது மனைவி பாக்கியலெட்சுமி மற்றும் மகன்கள் மனம் உடைந்தனர்.

குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று துக்கத்தில் வாடினர். ஆறுமுக நயினார் பணியின் காரணமாக தற்போது குஜராத்தில் உள்ளார். நாய் இறந்த செய்தி கேட்டு அவரும் கதறி துடித்துள்ளார். குடும்பத்தில் ஒருவனாக செல்லமாக வளர்த்ததால் நாய்க்கு சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே சந்திரங்காட்டில் உள்ள தங்களது நிலத்தில் நாயை அடக்கம் செய்து, அதில் கல்லறையும் கட்டி உள்ளனர்.

41-ம் தினத்தன்று பொம்மியின் படத்தை கல்லறையில் பொருத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அத்துடன் பொம்மி ஈன்ற குட்டி என்ற நாயும் தாயை இழந்ததால் 2 நாட்களாக சாப்பிடாமல் சோகத்தில் மூழ்கி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!