உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால் கணவனை தீர்த்துக்கட்ட முயன்றேன் – மனைவி வாக்குமூலம்!

கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியே கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சண்முகா நகரை சேர்ந்தவர் நடராஜன் ( வயது 52). இவர் நாமக்கல்லில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா (36).

நடராஜன் தனது ஜே.சி.பி எந்திரங்களை பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் தண்ணீர் பந்தல்மேடு பகுதியை சேர்ந்த கோபால்(35) என்பவரின் மேற்பார்வையில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று கிருத்திகா பரமத்தியில் உள்ள கடை ஒன்றில் பொருள் வாங்கி விட்டு வருவதாக கணவர் நடராஜனிடம் கூறிவிட்டு சென்றார். வீட்டில் நடராஜன் மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது வீட்டிற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நடராஜனை தாக்கி சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து, தப்பி ஓட முயன்ற மர்மநபரை பிடித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நடராஜனை காப்பாற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிடிபட்ட மர்மநபர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டி, நத்தக்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் யோகேஸ்வரன்(29) என்பது தெரியவந்தது. நடராஜனை தீர்த்துக்கட்ட அவரது மனைவி கிருத்திகாவும், ஜே.சி.பி. மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் கோபால் என்பவரும் சேர்ந்து தன்னை அனுப்பி வைத்ததாக அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார், கிருத்திகாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

எனது வீட்டிற்கு ஜே.சி.பி. மேற்பார்வையாளர் கோபால் அடிக்கடி வந்து செல்வார். இதனால் அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தோம். இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாதபோது இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். இதை அறிந்த கணவர், எங்களை கண்டித்தார். இதன் காரணமாக நடராஜனுக்கும் எனக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

தொடர்ந்து நடராஜன் எங்களது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்து வந்ததால் அவரை தீர்த்துக்கட்ட நானும், கோபாலும் முடிவு செய்து சேந்தமங்கலம் பகுதியைச்சேர்ந்த யோகேஸ்வரனிடம் இது குறித்து தெரிவித்தோம். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். அவரை தீர்த்து கட்டி விடுமாறு தெரிவித்தோம். இதனால் நடராஜனை வெட்டிக் கொன்று விடுவதாக அவர் உறுதியளித்தார்.

அவர் கூறியபடி நான், கணவரை மட்டும் வீட்டில் தனியாக உட்கார வைத்து விட்டு நைசாக கடைக்கு சென்றேன். பின்னர் யோகேஸ்வரன் அங்கு வந்து நடராஜனை கொலை செய்ய முயன்றார். ஆனால் பொதுமக்கள் யோகேஸ்வரனை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர். இதனால் நாங்கள் மாட்டிக் கொண்டோம். இவ்வாறு கிருத்திகா போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கிருத்திகாவையும், யோகேஷ்வரனையும் பரமத்தி வேலூர் போலீசார் கைது செய்து தலைமறைவாக உள்ள கோபாலை தீவிரமாக தேடி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!