சரணடைய சொன்ன ரஷிய போர் கப்பல் கேப்டன் – உக்ரைன் வீரர்களின் இறுதி நிமிடங்கள்!

சரணடையுமாறு கூறிய ரஷிய போர் கப்பல் கேப்டனை கெட்டவார்த்தையால் திட்டிய உக்ரைன் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்தனர்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனின் பாம்பு தீவில் உக்ரைன் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த ரஷிய போர் கப்பல் ஒன்று உக்ரைன் வீரர்களை சரணடையுமாறு கூறியது.

ரஷிய போர் கப்பலின் கேப்டன் தீவில் உள்ள உக்ரைன் வீரர்களிடம் ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு கூறினார்.

இது தொடர்பான ஆடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் ரஷிய போர் கப்பல் கேப்டன் கூறுகையில், பாம்பு தீவு, இது ரஷிய போர் கப்பல். உங்கள் (உக்ரைன் வீரர்கள்) ஆயுதகளை கீழே போட்டுவிட்டு சரணடையும்படி நான் கேட்டுக்கொள்கிறேன் அல்லது உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். உங்களுக்கு கேட்கிறதா?’ என்றார்.

இதற்கு, அந்த தீவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 13 உக்ரைன் வீரர்களின் தளபதி பதில் அளித்தார். அவர் கூறுகையில், சரி இது தான் முடிவு’ என்றார்.

மேலும், அவர் ரஷிய போர் கப்பல் மற்றும் அதன் படை வீரர்கள், தளபதியை கெட்ட வார்த்தையில் திட்டி சரணடைய மறுத்தார். இதனை தொடர்ந்து தீவில் இருந்த உக்ரைன் பாதுகாப்பு படையினர் மீது ரஷிய போர் கப்பல் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 13 பேரும் வீர மரணமடைந்தனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!