காதலிக்காக ஓட்டலில் கொள்ளை.. அமெரிக்காவில் 2022-ல் முதல் மரண தண்டனை!

இரண்டு பேரை கொலை செய்து ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வந்த டொனால்டு கிராண்ட் என்பவர் கடந்த 2001-ம் ஆண்டு தனது 25 வயதில், ஓட்டல் ஒன்றில் புகுந்து இரண்டு ஊழியர்களை கொலை செய்து கொள்ளையடித்தார்.

டொனால்டு கிராண்ட் ஒரு ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததுடன், மற்றொருவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். விசாரணையின்போது, ஜெயிலில் இருந்து அவரது காதலியை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

விசாரணை முடிவில் அவருக்க்கு நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால் டொனால்டு கிராண்டின் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போனது. பல்வேறு மாகாணங்களில் மரண தண்டனை நிறைவேற்றம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒக்லஹோமா மாகாணமும் ஒன்று. கடந்த 2015-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்ற தடைவிதிக்கப்பட்டது. அந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இந்த நிலையில் டொனால்டு கிராண்டிற்கு மூன்று விஷ ஊசிகள் செலுத்தப்பட்டு மரண் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 23 மாநிலங்களில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!