‘திடீர்’ மழை சென்னையில் வந்ததுக்கான காரணம் என்ன?

சென்னையில் பெய்த திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், நேற்று பிற்பகலில் இருந்து கன மழை கொட்டியதால், பல இடங்களில் மழைநீர் கொட்டியது. இந்த திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடல் பகுதியில் காலை வரை இருந்து வந்தது. அது குறைந்த நேரத்தில் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. அப்போது திரள் மேகக்கூட்டங்கள் சென்னை பகுதியில் இருந்த காரணத்தால், இந்த திடீர் கன மழை கொட்டியது. இந்த திரள் மேகக்கூட்டங்கள் வலுவிழக்கும் வரை சென்னைக்கு மழை நீடிக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நேற்று மாலையில் நிர்வாக ரீதியாக வழங்கப்படும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மொத்தத்தில் சென்னையில் இது எதிர்பாராத மழை என்றே ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!