லிப்டில் சிக்கி தவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் லிப்டில் சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 93 ரன்கள் குவித்தார். இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாட தன்னுடைய அணி வீரர்களுடனும் குடும்பத்தினருடனும் மெல்போர்னில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார் ஸ்டீவ் ஸ்மித். அப்போது அங்குள்ள லிப்ட்டை அவர் பயன்படுத்தியுள்ளார். எதிர்பாராத விதமாக லிப்ட் பழுதாகி பாதியில் நின்று விட்டது. இதனால், ஸ்மித் லிப்டுக்குள் மாட்டிக் கொண்டார் .

ஸ்மித் லிப்டில் சிக்கி கொண்ட சம்பவத்தை அடுத்து, ஓட்டல் ஊழியர்கள், அணி நிர்வாகிகள் பதற்றம் அடைந்தனர். லிப்ட் கோளாறை சரி செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது. லிப்டின் கதவைத் திறக்க முயற்சி எடுக்கப்பட்டது. இதனால் ஸ்மித் கொஞ்சம் அச்சப்பட தொடங்கினார்

லிப்டுக்குள் தான் மாட்டிக்கொண்டதை தனது செல்போன் மூலம் லிப்டில் வீடியோ எடுக்கத் தொடங்கினார். இதனைக் கண்ட ஸ்மித்தின் நண்பரும் , சக வீரருமான மார்னஸ் லபுசேன் லிப்ட் கதவின் இடுக்கு வழியில் ஸ்மித்துக்கு மிட்டாய்களை வழங்கினார்.

பின்னர் 55 நிமிட போராட்டத்திற்குப் பிறகு லிப்டின் கதவு திறக்கப்பட்டது. லிப்டின் கதவு திறந்ததும் ஸ்மித் வெளியே வர அங்கிருந்தவர்கள் கைத்தட்டி வரவேற்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!