கேப்டன் பதவி விவகாரத்தில் மூக்கை நுழைத்த அப்ரிடி!

இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலி பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் விமர்சனம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி. பாகிஸ்தான் அணிக்கான நீண்ட காலம் விளையாடிய அவர், கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இவர் பேசும் சில பேச்சுக்கள் விமர்சனத்திற்கு உள்ளாவது உண்டு. இவருக்கும் காம்பீருக்கும் இடையில் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக வார்த்தை போர் நடந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய ஒருநாள் அணி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டது குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். டெஸ்ட் போட்டிக்கான அணியை தேர்வு செய்வதற்காக அழைப்பு விடுப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்புதான் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக விராட் கோலி தெரிவித்தார்.

ஆனால், பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி ஏற்கனவே விராட் கோலியிடம் பேசப்பட்டது. அவர் எப்போதும் சண்டையிடுவார் என விமர்சனம் செய்தார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அப்ரிடி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய விவகாரத்தை தற்போதைய நிலையை விட சிறந்த வகையில் கையாண்டிருக்க வேண்டும். கிரிக்கெட் வாரியத்தின் பணி மிக முக்கியமானது என்று நான் எப்போதுமே நம்புகிறவன்.

எந்தவொரு குறிப்பிட்ட வீரர்களுடனும், தேர்வுக்குழு கமிட்டி திறமையான வகையில் கலந்துரையாட வேண்டும். இது எங்களுடைய திட்டம், நமக்கு இது சிறந்ததாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?. இதுபோன்று ஏதாவது வழிகளில் கையாள வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!