3 பசுக்களை சாகடித்த தாய்-2 மகன்கள் பரபரப்பு வாக்குமூலம்!

ஓமலூர் அருகே 3 பசுக்களை கத்தியால் குத்தி சாகடித்த வழக்கில் தாய், 2 மகன்களை போலீசார் கைது செய்தனர். ஆட்டு இறைச்சி கடை அருகே மாடுகளை கட்டியதால் ஆத்திரத்தில் மாடுகளை கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் தெய்வம் (வயது 57). இவருடைய மனைவி லட்சுமி. இவர்கள் இருவரும் சொந்தமாக 4 பசுக்களை வளர்த்து வந்தனர்.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த 4 பசுக்களும் காணாமல் போனதை கண்டு தெய்வம் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது மாடுகளை அக்கம்பக்கத்தில் தேடினார்.


கத்தியால் குத்தி சாகடிப்பு
அப்போது அவரது வீட்டின் பின்புறம் சுடுகாட்டு பகுதியில் அவர் வளர்த்து வந்த 3 பசுக்கள் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஒரு மாடு உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த மாட்டுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தெய்வம், தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுக்களை சாகடித்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்தனர்.


தாய்-2 மகன்கள் கைது
இந்த நிலையில் 3 பசுமாடுகளை கத்தியால் குத்தி சாகடித்தது, அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி வளர்மதி (வயது 54) மற்றும் மகன்கள் வடிவேல்(29), சக்திவேல்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து தாய், 2 மகன்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சக்திவேலும், வடிவேலும் அதே பகுதியில் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வந்துள்ளனர். கடை அருகிலேயே தெய்வம், மாடுகளை கட்டி வந்ததால் அவர்களுக்கு இடையூறாக இருந்தது. இதனால் அவர்களுக்கும். தெய்வத்துக்கும் இடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உள்ளது.


வாக்குமூலம்
இதனால் ஆத்திரம் அடைந்த வடிவேலும், அவரது தம்பி சக்திவேலும் சம்பவத்தன்று நள்ளிரவில் அந்த மாடுகளை பிடித்துச்சென்று கத்தியால் குத்தி சாகடித்து விட்டதாக போலீசார் விசாரணையில் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட வளர்மதி மற்றும் அவரது மகன்கள் வடிவேல், சக்திவேல் ஆகிய 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!