ஓட்டு வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த பாட்டியும், பேரனும் மரணம்!

ஜெயங்கொண்டத்தில், பக்கத்து வீட்டு நீர் தேக்கத் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்ததில், ஓட்டு வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த பாட்டியும், பேரனும் உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தேவாங்க முதலியார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மனைவி செல்வி தாயார் லட்சுமி மற்றும் மகன் அஜித்குமார் உடன் வசித்து வருகிறார்.

ஆறுமுகத்திற்கு 3 மகன்கள் உள்ளனர் மூத்த மகன் விஜயக்குமாருக்கு திருமணமாகி தனியே வசித்து வருகிறார். 2-வது மகன் பாரதி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தந்தை கூலி வேலை செய்து வரும் நிலையில் 3-வது மகன் அஜீத்குமார் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த மூன்று நாட்களாக ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் கன மழை பெய்து வந்த நிலையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் ஆறுமுகம் வீட்டின் அருகில் மாடியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் இடி மின்னல் தாக்கியதில் தண்ணீர் தொட்டியின் சுவர் இடிந்து அருகிலிருந்த ஆறுமுகத்தின் ஓட்டு வீட்டின் மீது விழுந்தது.

ஏற்கனவே மழையினால் ஊறியிருந்த ஆறுமுகத்தின் வீட்டின் ஓட்டு கூரை மற்றும் மண்சுவரும் சேர்ந்து திடீரென இடிந்து உள்ளே விழுந்ததில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த பாட்டி லெட்சுமி (80) மற்றும் பேரன் அஜீத்குமார்(25) இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் மற்றொரு அறையில் படுத்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அஜீத்குமாருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த நிலையில் வீடு இடிந்து அஜீத்குமார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!