2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் விபரீத முடிவு!

வரதட்சனை கொடுமையால் தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராய் சூட்டியை சேர்ந்தவர் ராம்நாத். இவரது மனைவி அனிதா (வயது30). தம்பதிக்கு தனுஷ் (6), பார்கவ் (4) என 2 மகன்கள் இருந்தனர். ராம்நாத்தின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அனிதாவை 2-தாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தாய் வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வரும்படி அனிதாவை ராம்நாத் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அனிதா நேற்று அதிகாலை தனது 2 குழந்தைகளுடன் அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றுள்ளார். தனது 2 மகன்களையும் கிணற்றில் தள்ளிவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் அனிதா அவரது 2 குழந்தைகள் கிணற்றில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அனிதாவின் உறவினர்கள் ராய் சூட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராய் சூட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்நாத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராம்நாத் வரதட்சணை கேட்டு தினமும் அனிதாவை அடித்து துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!