ஜாதகத்தில் உள்ள மாங்கல்ய தோஷத்தால் ஏற்படும் விளைவுகள்!

ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குச் ஜோதிட ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாமிடம் என்பது மாங்கல்ய ஸ்தானமாகும். இதுவே ஆயுள் ஸ்தானம் மற்றும் தாம்பத்திய உறவு பற்றியும் கூறும் இடமாகும்.

2-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 8-ம் இடத்தைப் பார்க்கும். 8-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 2-ம் இடத்தைப் பார்க்கும். 2-ம் இடத்திற்கும் 8-ம் இடத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. பெண்ணின் ஜனன கால ஜாதகத்தில் 2, 8-க்கு தொடர்புடைய பாவ கிரகங்கள் மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்துகிறது.

இந்த தோஷத்தால் தம்பதிகளுக்குள் வாக்குவாதம் அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையால் பயனற்ற நிலை உண்டாகும். சுயமாக சிந்தித்து செயல்படத் தெரியாத ஆண், குடும்பத்தை முறையாக வழிநடத்தத் தெரியாத, சம்பாதிக்காத, சோம்பேறியாக, ஊதாரியாக வாழும் கணவர் அமைவார்.

இல்லையேல் சில குடும்பத் தலைவர்கள் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் தன் விருப்பப்படியே மனைவி வாழ வேண்டும் என்று விரும்புவார். கைப்பாவையாக நடத்துவது, அடிமை போல் வேலை வாங்குவதும் 8-ம் மிடக் குறைபாட்டில் அடங்கும். வாழ்க்கைத் துணைக்கு தீராத, தீர்க்க முடியாத அதிகப்படியான கடன் அல்லது நோய் இருக்கும்.

தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக கருத்து வேறுபாடு இல்லாமல் பிரிந்து வாழ்வது அல்லது கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பிரிந்து வாழ்வது. அல்லது தம்பதிகளில் ஒருவர் மட்டும் இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!