குழந்தை பெற்ற தாய்மார்கள் சாப்பிட வேண்டிய பத்தியக் குழம்பு செய்வது எப்படி..?


பிரசவித்த தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய பத்தியக் குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம். இது தாய்மார்களுக்கு அதிக பால் சுரக்க உதவும்.

மருத்துவ குணங்கள் :

தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மாவுசத்துள்ள உணவுப்பொருட்களை சாப்பிடவேண்டும்.

தேவையான பொருட்கள் :

பூண்டு – 5 பல்

புளி – ஒரு நெல்லிக்காய் அளவு

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

வெல்லம் – அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

மசாலா அரைக்க :

தேங்காய் – 2 சிறிய துண்டுகள்

பூண்டு – 5 பல்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

மிளகு – 2 டீஸ்பூன்


செய்முறை :

புளியைக் கால் கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், தேங்காயை சிறுத் துண்டுகளாக வெட்டி அதனுடன் மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் வெந்தயம் தாளித்து, உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

நன்றாகக் கொதித்து வரும்போது, புளிக் கரைசலைச் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை அடுப்பில் வைத்து இடித்த வெல்லம் சேர்த்து கிளறிய பின்னர் இறக்கவும். விரும்பினால், கறிவேப்பிலையை தாளித்து இதில் சேர்த்துக் கொள்ளலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!