மூதாட்டியை தோசை கல்லால் அடித்து கொன்ற பேரன்!

பொன்னேரி அருகே மதுபோதையில் மூதாட்டியை தோசைக் கல்லால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.

பொன்னேரி அருகே ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட பசுவன்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் சுசீலா (வயது 72). இவர் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 5 மகள்களும், ஒரு மகனும் உண்டு. இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவரது மகன் ரங்கநாதன் (50). சென்னை மதுரவாயல் அருகே வானகரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஜெகன் (30). இவர் கடந்த 20-ந்தேதி பசுவன்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஜெகன் பாட்டியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.

அவர் கொடுக்க மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வீட்டிலிருந்த தோசைக்கல்லை எடுத்து மூதாட்டி சுசீலாவை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், முதலுதவி பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

பின்னர் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுசீலாவின் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தலைமறைவான பேரன் ஜெகனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஞாயிறு ஊராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!