காதல் திருமணம் செய்த புதுப்பெண் விபரீத முடிவு!

வரதட்சணை கொடுமையால் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

காதல் திருமணம்

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா பெக்கா கிராமத்தை சேர்ந்தவர் பூஜா(வயது 20). இதுபோல சக்லேஷ்புரா அருகே மலலி கிராமத்தில் வசித்து வருபவர் அஸ்வத். இவர்கள் 2 பேருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் உண்டானது. அந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் பூஜாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஆனால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பூஜாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பூஜா வீட்டைவிட்டு வெளியேறி அஸ்வத்தை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

ஆற்றில் குதித்து தற்கொலை

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பூஜாவிடம் சண்டை போட்ட அஸ்வத் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த பூஜா தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் மளலி கிராமத்தில் ஓடும் ஹேமாவதி ஆற்றில் குதித்து பூஜா தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த சக்லேஷ்புரா போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று பூஜாவின் உடலை தேடினர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் பூஜாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் வரதட்சணை கொடுமையால் பூஜா ஆற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து சக்லேஷ்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அஸ்வத்தை பிடித்து விசாரித்து வருகின்றனர். காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் மளலி கிராமத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!