அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி!

மதுசூதனன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று மதுசூதனன் மரணம் அடைந்தார்.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு மதுசூதனனின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று காலையில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மதுசூதனனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் நடுவில் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எபினேசர் எம்.எல்.ஏ., வட சென்னை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இளைய அருணா ஆகியோரும் சென்றிருந்தனர்.

மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா இன்று காலை 10 மணிக்கு வந்தார். அவர் வந்தபோது கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் தொண்டர்களை விலக்கி அவருக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர் மதுசூதனன் உடலுக்கு ரோஜாப்பூ மாலை போட்டு சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவர் கண்ணீர் மல்க காணப்பட்டார். பின்னர் மதுசூதனனின் குடும்பத்தினருக்கு சசிகலா ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் மதுசூதனன் உடலுக்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், பென்ஜமின், காமராஜ், மாபா.பாண்டியராஜன், பா.வளர்மதி, மாதவரம் மூர்த்தி, மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.குப்பன், வாலாஜாபாத் கணேசன், பூங்காநகர் சீனிவாசன், முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்யா, வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ். ராஜேஷ், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், ராயபுரம் மனோ, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!