எனது மனைவி பல ஆண்களுடன் உறவு… கடைசியில கொளுத்திட்டா – கணவர் வாக்குமூலம்


ஆண் நண்பருடனான உறவுக்கு தடையாக இருந்ததால், தன்னையும், தன் குழந்தைகளையும் மனைவி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பு அளித்த தகவல்கள்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சசிகுமார் (37) என்பவருக்கும் அதிபெரமனூர் பகுதியை சேர்ந்த பிரியா (32) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பிரதீப் (10) என்ற மகனும், பிரித்திகா (8) என்ற மகளும் உள்ளனர். சசிகுமார் குடும்ப வறுமையின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பேச விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
பிரியா செல்போனில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிக் டாக் உள்ளிட்ட செயலியை பயன்படுத்தி பல ஆண் நண்பர்களிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது பிள்ளைகளுக்கு தெரிந்துள்ளது. இந்த விஷயத்தை அவரது மகன் பிரதீப் தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். கணவன் வீட்டில் இருப்பதால் வெளியில் எங்கும் செல்லமுடியாத சூழலில் இருந்த பிரியா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே கணவர் சசிகுமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று பிரியா ஆண் நண்பருடன் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கடும் கோபத்தில் இருந்த சசிகுமார் இந்த சம்பவம் குறித்து கண்டித்துள்ளார். இதனால் கணவன் மற்றும் பிள்ளைகளை கொலை செய்யவேண்டும் என்று திட்டமிட்ட பிரியா 2 லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்ததாக தெரிகிறது. இரவு தூங்கும்போது கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கணவன் மற்றும் பிள்ளைகள்மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வெளியில் இருந்துள்ளார். தீயில் சிக்கிய கணவன் மற்றும் பிள்ளைகள் கூச்சலிட்டதால் உறவினர்கள் ஓடி வரும்போது குழந்தைகளை காப்பாற்றுவதுபோல நடித்து லேசான தீக்காயம் அடைந்த பிள்ளைகளை வெளியே தூக்கி போட்டதாக சொல்லப்படுகிறது. சசிகுமார் மட்டும் முழுவதுமாக எரிந்து கருகி சம்பவ இடத்தில் சுருண்டு விழுந்து உள்ளார்.

இதனையடுத்து சசிகுமாரின் உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் விரைந்துவந்த நாட்றம்பள்ளி போலீசார் தீக்காயத்துடன் இருந்த சசிகுமார் மற்றும் பிள்ளைகளை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முதலுதவி செய்தபிறகு மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் உயிருக்குப் போராடிய சசிகுமாரிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்றுள்ளார்.

அந்த வாக்குமூலத்தில் எனது மனைவி பல ஆண்களுடன் உறவில் இருந்து வருகிறார். இதனை கண்டித்ததால் என்னை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டார். பிள்ளைகளும் இடையூறாக இருப்பதால் அவர்களையும் கொலைசெய்ய திட்டமிட்டு ஊற்றி கொளுத்தினார் என்று சசிகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் அதிரடியாக பிரியாவை கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பிள்ளைகளும் தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.- source: puthiya.thalaimurai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!