ஆன்லைன் சூதாட்டம்… வங்கி ஊழியர் அதிர்ச்சி முடிவு..!


ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை சீரநாயக்கன்பாளையம் கருப்பராயன் கோவில் ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் ரவி. கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் மதன்குமார் (வயது 28). இவர் கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி வந்தார். இதில் அவர் தொடக்கத்தில் அதிக பணம் சம்பாதித்தார்.

இதன் காரணமாக அவர் தொடர்ந்து ஆன்லைனில் சூதாட்டம் விளையாடினார். ஒரு கட்டத்தில் அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் அவர், கடந்தசில மாதங்களாக அதிக பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதன்குமார் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மதன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் கூறியதாவது:-

கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் வங்கியில் தற்காலிகமாக பணியாற்றி வந்த மதன்குமார், தேர்வு எழுதி 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் நிரந்தர ஊழியராகி உள்ளார். அவர், வேலை நேரம்போக மற்ற நேரங்களில் தனது செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். அவர் பணம் வைத்து சூதாடியது பெற்றோருக்கு தெரியவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்ததால் அவர் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார் என்பது தெரியவில்லை.

இது குறித்து அவரது நண்பர்களிடம் ஏதும் கூறினாரா? என்று விசாரணை நடத்தி வருகிறோம். மதன்குமார் செல்போன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மதன்குமாரின் செல்போனில், அவரது விரல்ரேகையை பதிவு செய்தால் தான் திறக்கும். எனவே அவரது செல்போனை கைப்பற்றி அதை திறந்து ஆய்வு செய்த பிறகு தான் அவர் எவ்வளவு பணத்தை சூதாட்டத்தில் இழந்தார் என்பதை கண்டறிய முடியும். மேலும் அவரது வங்கி கணக்கையும் ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!