பக்தர்களுக்கு வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்களை கொடுக்கும் சீரடி சாய் பாபா..!


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கே.ஜி.கண்டிகை மலையடிவாரம் சாய் நகரில் ஸ்ரீ சீரடி சாய் சேவா மந்திர் என்ற சீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய்மந்திரில் இருக்கும் கட்டிட அமைப்பைப் போல் இங்கும் சாய்பாபாவுக்கு பிரமாண்ட ஒரு கோயில் எழுப்பப்பட்டது. அங்குள்ள சாய்மந்திரில் நடைபெறும் காகட ஆரத்தி, மத்தியம ஆரத்தி, சந்தியா ஆரத்தி என பல்வேறு பூஜைகளுடன் இரவு 8 மணிக்கு ஸ்டேஜ் ஆரத்தி மற்றும் வியாழக்கிழமைகளில் சாய்பாபாவுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும் தீப ஆரத்திகளும் நடைபெறுகின்றன.

மேலும், சாய்பாபாவுக்கு உகந்த தினங்களில் பல்லக்கு சேவையும் தொடர்ந்து நடைபெறுகிறது. இக்கோயிலில் நாள்தோறும் மதிய வேளைகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கே.ஜி.கண்டிகையில் உள்ள ஸ்ரீ சீரடி சாய் சேவா மந்திரில் உள்ள சாய்பாபா ஆலயத்திலும் கோ சேவாவும், பவுர்ணமி பூஜை, குரு பூஜை என அனைத்து பூஜைகளும் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஏழை மற்றும் அனாதை குழந்தைகளுக்கு இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இக்கோயிலின் அனைத்து விசேஷ நாட்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகளை பார்ப்பது மனதை சாய்பாபாவுடன் ஐக்கியமாகும் வகையில் உள்ளது என பக்தர்கள் கூறுகின்றனர். கே.ஜி.கண்டிகையில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கோயிலுக்கு திருத்தணி, திருவள்ளூர், சென்னை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து, தங்களது வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகின்றனர்.- Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!