சீரடி சாய்பாபாவை மனம் உருகி வழிபட்டால் நினைத்ததை அடைவார்கள்..!


சீரடி சாய்பாபா, தன்னை முழுமையாக நம்பி வழிபடுபவர்கள் வாழ்வில் மகத்தான மாற்றங்களையும், மகிழ்ச்சி கலந்த மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துகிறார். அவரை நினைத்து மனம் உருகி வழிபட்டால் நீங்கள் வாழ்வில் நினைத்ததை நடத்தும் ஆற்றலைப் பெறுவீர்கள். சாயிமகான் 1854-ஆம் ஆண்டு, தனது பதினாறாவது வயதில் சீரடிக்கு வருகை புரிந்தார். ஆனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

சில ஆண்டுகள் கழிந்தன. சாந்த் பட்டேல் என்பவர் காட்டுவழியில் சென்று கொண்டிருந்தபோது பாபாவைக் கண்டார். பாபா அவரிடம் இளைப்பாறும்படி கூறினார். இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது. பாபா தன் கையிலிருந்த கத்தியால் நிலத்தைத் தோண்ட நெருப்பு வந்தது, பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது. மேலும், சில மாதங்களுக்கு முன் காணாமல் போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும் இடத்தையும் பாபா கூறினார். பாபாவின் மகிமையை சாந்த் பட்டேல் புரிந்து கொண்டார்.

சாந்த் பட்டேல், பாபாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று சில நாட்கள் வீட்டிலேயே தங்க வைத்து உபசரித்தார். திருமண நிகழ்ச்சிக்காக சீரடி சாய்பாபா வந்தபோது, பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்ட பூசாரி, அவரை `சாயி’ என்று அழைத்தார். `சாயி’ என்றால் பாரசீகத்தில் `சுவாமி’ என்று பொருள். `பாபா’ என்பது இந்தியில் `அப்பா’ என்று பொருள். இரண்டும் இணைந்து `சாயிபாபா’ என்ற திருப்பெயரே நிலைத்து விட்டது. சாயிபாபா சீரடியிலேயே தங்கிவிட தீர்மானித்தார்.

சீரடி மக்கள் பாபாவிடம் `நீங்கள் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘நானே அல்லா! நானே சங்கரன்! நானே ஸ்ரீகிருஷ்ணன்! நானே அனுமன்!” என்று கூறினார். ஆமாம்! அவர் இப்பூமியில் இறைஅம்சம் கொண்டவராகவே அவதரித்தார்! பல ஆண்டுகள் ஒரு யோகியைப் போலவே வாழ்ந்த பாபா பிச்சை எடுத்தே உண்டார். தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார். பாபாவின் புகழ் சுற்றுவட்டாரங்களில் பரவத் தொடங்கியது.

அவர்கள் பாபாவின் தெய்வீகத் தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும் எடுத்துக் கூறினர். பாபாவைத் தேடி பக்தர்கள் வரத் தொடங்கினர். ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தைக் கவனித்துக் கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார். பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவைப் பெருகச் செய்தார் பாபா.

பாபா பஜனையையும், பாடல்களையும் விரும்பினார். பக்தர்களிடம் பஜனைகளையும், பாடல்களையும் பாடும்படி உற்சாகமூட்டினார். பாடல்களுக்குத் தக்கபடி பாபா நடனமாடினார். ஒரு தாயைப் போல ஏழைகளிடம் நடந்து கொண்டார். தொழுநோயாளிகள் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார். அவர்களது உடலில் உள்ள புண்களை தன் கையாலேயே கழுவி அவர்களுக்கு மருத்துவம் செய்தார்.

பாபா சாஸ்திரங்களையும் ஐயமறக் கற்று உணர்ந்திருந்தார். பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களைக் கூட வியப்படையச் செய்தார். பாபா மதங்களைக் கடந்து நின்றார். பாபா மக்களுக்குக் கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும், பொறுமையும் ஆகும். தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கெல்லாம் விபூதியையே பிரசாதமாகத் தந்து, அவர்களின் நோய்களை நீக்கியவர் பாபா.

வாழ்வில் பொறுமையும், தன் மீது நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர் எப்போதும் துணை நிற்கிறார். துவாரகாமாயீயில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. அந்நெருப்புக் குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது. சாயிமகான் 1918-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாள் தன் ஸ்தூல உடலை உகுத்தார். தன் ஸ்தூலஉடல் மறைந்த பின்னும் இன்றும் சாயிமகான் அருள் புரிந்து வருகிறார். – Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!