இந்தக் குறைபாடு கொண்டவர்களின் உயிரைக் குடிக்கும் கொரோனா


வைட்டமின்-டி சத்து குறைபாடு கொண்டவர்களின் உயிரை அதிக அளவில் கொரோனா வைரஸ் காவு வாங்கியிருப்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிரை வேகமாக குடித்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த ஒரு பக்கம் மருத்துவ விஞ்ஞானிகள் தடுப்பூசி மற்றும் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இன்னொருபுறம், கொரோனா எப்படிப்பட்டவர்களை தாக்குகிறது? என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மாற்றி உயிரிழப்பை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த விரிவான ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத முதியவர்கள் உயிரை கொரோனா வைரஸ் எளிதில் தனக்கு இரையாக்கிக்கொள்கிறது, என்பது தொடக்கத்திலேயே கண்டறியப்பட்ட உண்மை.

2 வாரங்களுக்கு முன்பு 120 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவர்களில் 5-ல் ஒருவர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழக்கிறார் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்தது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் ஆஸ்பத்திரி பவுண்டேசன் டிரஸ்ட் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து 20 ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எந்த குறைபாடு காரணமாக இறந்தார்கள்? என்பதை ஒப்பீடு செய்து அண்மையில் ஓர் ஆய்வை நடத்தினர்.

இதன் தொடக்க நிலை ஆய்வின் முடிவில் பெரும்பாலானவர்கள், வைட்டமின்-டி சத்து குறைபாட்டால் கொரோனா வைரசிடம் உயிரை பறிகொடுத்திருப்பது, தெரிய வந்துள்ளது.

இடைத்தொடர்ந்து வைட்டமின்-டி சத்து கிடைக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வைட்டமின்-டி சத்து கூடுதலாக கிடைத்தால் அவர்கள் வேகமாக குணம் அடைவதற்கு வாய்ப்பு அதிகம். ஏனென்றால் இந்த சத்து குறைபாடு காரணமாகத்தான் இவர்களை கொரோனா எளிதாக தாக்கி உள்ளது. இறந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைட்டமின்-டி மிகவும் குறைவாக கொண்டிருந்தவர்கள்தான்” என்றனர்.

சரி, வைட்டமின்-டி சத்து எவற்றில் இருந்து அதிகம் கிடைக்கிறது?

* இயற்கையாகவே சூரிய ஒளி மூலம் வைட்டமின்-டி மனிதர்களுக்கு நிறைய கிடைக்கிறது.

* மீன்களில் சூரை, காலா, கானாங் கெழுத்தி, சங்கரா ஆகியவற்றில் வைட்டமின்-டி உள்ளது. குறிப்பாக காலாவில் அதிகம்.

* ஆரஞ்சு பழச்சாறு, தானிய வகைகள், சோயா பால், பாலாடைக்கட்டி, காளான், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றிலும் வைட்டமின்-டி தாராளமாக கிடைக்கிறது.

கொரோனாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது, அவ்வப்போது சோப்பால் கை கழுவது போன்றவற்றுடன் வைட்டமின்-டியும் நல்ல ஆயுதமாகத்தான் தெரிகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!