கொரோனா வைரசை சாம்பலாக்கும் திட்டம் தயார் – சர்வதேச ஆயுத வியாபாரி


100 மணி நேரத்துக்குள்ளாக கொரோனாவை எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக உலகின் முன்னணி ஆயுத வியாபாரியும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் ஷம்ஷர் தெரிவித்துள்ளார்.

உலகை உலுக்கி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஒருவேளை ஏதேனும் ஒருநாடு கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தாலும் அது மக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும். இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை ஒழிக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன.

இந்த நிலையில் 100 மணி நேரத்துக்குள்ளாக கொரோனாவை எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக உலகின் முன்னணி ஆயுத வியாபாரியும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் ஷம்ஷர் தெரிவித்துள்ளார்.

வங்காளதேசத்தை சேர்ந்த மூசா பின் ஷம்ஷர் இது தொடர்பாக அவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனாவை ஆபத்தான ஆயுதங்களை விட பயங்கரமானதாக கருதி அதனை அழிக்க உலக விஞ்ஞானிகள் குறிப்பாக நாசாவின் பிரபல விஞ்ஞானிகள் முன்வர வேண்டும். இல்லையென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் மனித நாகரிகம் முழுவதுமாக அழிந்துவிடும்.

அணு அல்லது யுரேனியம் சாம்பலை செல்பார் சாம்பலுடன் சேர்த்து தடிமனான புகையை நாசாவால் உருவாக்க முடியும். அதில் மனித உடல்நல கேடுகளை தவிர்ப்பதற்கு விஞ்ஞானிகள் வேறு சில கூறுகளைச் சேர்க்கலாம்.

அதன் பின்னர் அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் மூலம் அதிகபட்சமாக 10,000 அடி உயரத்தில் இருந்து இந்த புகையை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.

கொரோனா நோயாளிகளை எவ்வாறு குணப்படுத்தப்படுவது என்பது குறித்து உலக தலைவர்களுக்கு எதுவும் தெரியாது. எனவே எனது ஆலோசனையை கேட்டு நடந்தால் உலக நாடுகள் அழிவில் இருந்து தப்பலாம்.

உங்களால் (டிரம்ப்) மட்டுமே இந்த உலகத்தையும் மனிதநேயத்தையும் காப்பாற்ற ஒரு கடவுளைப் போல செயல்பட முடியும். எனது கடிதத்துக்கு விரைவாக பதிலளிக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!