சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநரை புறக்கணித்து வெளி நடப்பு செய்த ஸ்டாலின்..!


தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்ற உள்ளார். இதற்காக, அவைக்கு வந்த அவரை சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றனர்.

ஆளுநர் அவைக்குள் நுழைந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. பின்னர் தனது உரையை தொடங்க ஆளுநர் எழுந்தார். ஆனால், அவர் பேசும் முன்னரே தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குரல் எழுப்பினர். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆளுநர் அவர்களை நோக்கி உட்காருங்கள் என்று தமிழில் கூறினார்.

இதனையடுத்து, விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் கருத்துக்களை தெரிவிக்குமாறு ஆளுநர் அறிவுரை கூறினார். ஆனால், அவரது உரையை புறக்கணித்து தி.மு.க, காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இவர்களுடன், தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.


இதனையடுத்து, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது:-

ஆட்சியில் இருக்க தேவையான பெரும்பான்மை இல்லாத அ.தி.மு.க அரசு ஆட்சியில் நீடிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதை ஆளுநர் அனுமதிப்பது வினோதமாக உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாமல் அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிக்கிறார். இதனால், இந்த உரையை தி.மு.க புறக்கணித்தது.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது முடிந்த பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!