மக்களிடம் கொரோனா முன் எச்சரிக்கை இல்லை – கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேதனை


கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேதனை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதுவரை 6,500 பேர் வரை பலியாகி உள்ளனர். 1.69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் அனைத்து வகையான விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் உள்ளன.

பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந்தேதிவரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து குறைந்த அளவிலான ஆட்டங்கள் நடைபெறுமா? என்பது பின்னர் தெரியவரும்.

இந்தியாவில் கொரோனாவுக்கு 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்த நிலையில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேதனை தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த டெஸ்ட் வீரரான அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-

கொரோனா முன் எச்சரிக்கையை சென்னை மக்கள் தவிர்க்கிறார்கள். மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு கூறப்பட்டதை சென்னை மக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

சென்னையில் நிலவும் கடுமையான வெப்ப நிலையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என்று மக்கள் நினைத்து இருக்கலாம். அல்லது தங்களை எதுவும் தாக்காது என நம்பிக்கை கொண்டு இருக்கலாம்.

இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!