கணவன், மனைவி தகராறை சமாதானம் செய்ய சென்ற என்ஜீனியர் நேர்ந்த பயங்கரம்..!


வேலூர் அருகே கணவன் மனைவி தகராறை சமாதானம் செய்த என்ஜீனியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரம் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 48).

இவர் ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது பெங்களூருவில் என்ஜினீயராக பணிபுரிந்த நிர்மலாவின் அண்ணன் நந்தகோபாலன் (52) சமாதானம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வகணே‌ஷ, நிர்மலா ஆகியோர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நிர்மலா இதுகுறித்து செல்போனில் நந்தகோபாலனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே நந்தகோபாலன் பணி முடிந்ததும் மாலையில் வேலூர் வந்து செல்வகணேசிடம் நியாயம் கேட்கிறேன் என்றார்.

அதன்படி இரவு 11 மணி அளவில் வேலூர் வந்த அவர் சமாதானம் செய்வதற்காக செல்வகணேஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது செல்வகணேஷ் மற்றும் அவரது உறவினர்களுக்கும், நந்தகோபாலனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வகணேஷ் மற்றும் அவரது உறவினர்கள் நந்தகோபாலனை சரமாரிய தாக்கினர். இதில் அவர் நிலைக்குலைந்து அங்கேயே மயங்கி விழுந்தார்.

பின்னர் அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அழகுராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சத்துவாச்சாரி வள்ளலார் வசந்தம் நகரை சேர்ந்த விக்னேஷ் (35), காகிதப்பட்டறையை சேர்ந்த மணிகண்டன் (29), சேண்பாக்கத்தை சேர்ந்த கோட்டீஸ்வரன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செல்வகணேஷ், அவரது அக்காள் அரசு பள்ளி ஆசிரியையான சாந்தி, அவரது கணவர் ரவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இறந்த நந்தகோபாலனுக்கு சுதர்ஷினி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குடும்பத்தகராறில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!