ஸ்பெயின் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு… கணவருடன் தனிமையில் சிகிச்சை..!


ஸ்பெயின் நாட்டு சமத்துவ மந்திரி ஐரீன் மன்டெரோவுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் அவர் கணவருடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் தோற்றிய கொரோனா வைரஸ் உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, ஆயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. ஏழை, பணக்காரன் என்று பாராமல், பாரபட்சமின்றி அனைவருக்கும் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

ஸ்பெயின் நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 55 பேர் பலியான நிலையில், 2,277 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த நாட்டின் சமத்துவ மந்திரி ஐரீன் மன்டெரோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்த தகவலை அவரது கணவரும் துணைப்பிரதமருமான பப்லோ இக்லேசியஸ் தெரிவித்தார். மேலும் அரசு உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட ஐரின் மன்டெரோ அவரது கணவருடன் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. நேற்று முன்தினம் வரை 631 ஆக இருந்த பலியானோர் எண்ணிக்கை, 827 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் அங்கு 196 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நாட்டின் தலைநகரான ரோமில் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தென்கொரியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ள நிலையில், வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் 7 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது.

ஜெர்மனியில் கொரோனா வைரசால் ஏற்கனவே 2 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயதுடைய முதியவர் இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆனது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,567 ஆனது. கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து அங்குள்ள 2 பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை தள்ளி வைத்துள்ளன.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!