உசிலம்பட்டியில் அராஜகம்.. ஒரு மாத சிசுவுக்கு கள்ளி பால்.. பதற வைத்த பெற்றோர்..!


“போய்வாடி அன்னக்கிளி” என்று ஒரு மாத பிஞ்சு குழந்தைக்கு கள்ளி பாலை ஊற்றி கொன்றே விட்டனர் “பாய்சன் பெற்றோர்”!

மதுரை மாவட்டம், செக்கானூரணியை அடுத்துள்ள பகுதியை சேர்ந்தவர் வைரமுருகன்.. இவரது மனைவி சவுமியா.. வயது 24 ஆகிறது.

தங்கள் வீட்டு வாசல் முன்னாடியே பழக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.. இந்நிலையில், சவுமியாவுக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி, 2வதாக இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. இதனால் தம்பதி 2 பேருமே விரக்தியடைந்தனர்.

அதனால், கடந்த மார்ச் 2ம் தேதி இரவு, அந்த பெண் சிசு இறந்து விட்டதாக கூறி வீட்டு அருகிலேயே குழி தோண்டி புதைத்துள்ளனர்… மேலும் குழந்தை இறந்த விஷயத்தை சொந்தக்காரர்கள் யாரிடமும் இவர்கள் சொல்லவும் இல்லை. ஆனால் அக்கம்பக்கத்தினருக்கு இது பெருத்த சந்தேகமாகவே இருந்தது.

பிறந்த குழந்தை நன்றாகத்தானே இருந்தது? எப்படி இறந்திருக்கும்? ஏன் யாருமே சாவுக்கு வரவில்லை? விஷயமும் வெளியே தெரியவில்லையே என்று பல சந்தேகங்கள் எழுந்தன. இந்த சந்தேகங்களை மீனாட்சிபட்டி விஏஓ மந்தக்காளையிடமும் சொன்னார்கள். உடனே அவரும் இதை பற்றி மதுரை அவசர காவல் உதவி நம்பர் 100க்கு போன் பண்ணி தகவல் சொன்னார்.

இதனையடுத்து செக்கானூரணி போலீசார் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான் வைரமுருகன் வீட்டின் அருகில் இருந்த வேப்பமரத்திற்கு கீழே பள்ளம்தோண்டி மூடியது போன்று தெரிந்தது.. அதனால் அந்த இடத்தை தோண்டினர்.. அப்போதுதான் புதைக்கப்பட்டிருந்த பெண் சிசு உடலை கண்டனர்.. அந்த சிசுவை மீட்ட போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பினர்.. குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றது ரிப்போர்ட்டில் வந்துவிட்டது.

இதையடுத்து வைரமுருகன், சவுமியா, வைரமுருகனின் தந்தை சிங்கத்தேவர் ஆகிய பேரையும் கைது செய்தனர். மண் தோண்டி புதைத்தபோது, ஒரு மாத குழந்தை அது.. 2வதும் பெண் என்பதால் கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவிட்டோம் என்று பெற்றோர் வாக்குமூலம் சொன்னார்கள்.. கொலை செய்த சம்பவம், பெரிய பரபரப்பையும் அதிர்ச்சியையும் இன்னும் ஏற்படுத்தியபடியே உள்ளது.

20 வருடங்களுக்கு முன்பு உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த பெண் சிசு கொலை அதிகமாக தலைதூக்கியது… பெண் குழந்தைகள் வளர்ப்பு குறித்த புரிதல் இல்லாததால், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையும் இல்லாததால்தான் அக்குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொன்றார்கள். பிறந்த குழந்தை என்று கிடையாது, பெண் குழந்தை பிறந்துவிடும் என்ற பயத்தில் கூட கருக்கலைப்பு நடந்துள்ளது.. அந்த கருக்கலைப்பினால், உயிருக்கு ஆபத்தும் நிகழ்ந்திருக்கிறது. இந்த கொடூரங்களை தடுக்கதான் தொட்டில் குழந்தை திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார்.

இந்த சமயத்தில், கருத்தம்மா.. என்ற படத்தை பாரதிராஜா இயக்கினார்.. அத்திபூத்தாற்போல வெளிவரும் படங்களில் இதுவும் ஒன்று.. தேசிய விருது வழங்கப்பட்ட படம்.. பெண் குந்தைகளை கள்ளிப்பாலை ஊற்றி கொன்று வந்த காலகட்டத்தில், சரியான நேரத்தில், சரியான சவுக்கடியாக வெளிவந்த படம். இந்த படம் வெளியான பிறகு, ஓரளவு பெண் குழந்தைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டது உண்மையே.. ஆனால், இந்நிலை தற்போது மீண்டும் தலையெடுக்க துவங்கி உள்ளதாகவே தெரிகிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!