தாயின் கண் முன்னே தந்தையை வெட்டிக்கொன்ற கல்லூரி மாணவர்.. அதிர வைத்த காரணம்..!


மேட்டுப்பாளையத்தில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையை வெட்டிக்கொன்ற கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம் சிராஜ் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). ஓய்வு பெற்ற ராணுவவீரர். இவரது மனைவி அமுதவள்ளி (38). இவர்களது மூத்த மகன் சச்சின்குமார் (17). காரமடையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது 2-வது மகன் சஞ்சய்குமார் (14) அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கருப்பசாமிக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் குடித்து விட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் குடும்பத்தில் நிம்மதியில்லாம் இருந்தது. ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழமுடியாது என்று முடிவு செய்த அமுதவள்ளி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 2 மகன்களுடன் சிறுமுகை அருகே உள்ள இரும்பறையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். பிரிந்து சென்ற பின்னரும் மனைவியிடம் அடிக்கடி கருப்பசாமி தகராறு செய்து வந்தார். இதற்கிடையே மகன்களை படிக்க வைத்து ஆளாக்கினார்.

இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் இருந்த கருப்பசாமி மனைவிக்கு போன் செய்து உன்னிடம் பேச வேண்டும் உடனே வா என்று கூறினார். இதனையடுத்து தனது மூத்த மகன் சச்சின்குமாரை அழைத்துக்கொண்டு கணவரை பார்க்க சிராஜ் நகருக்கு அமுதவள்ளி வந்தார். அப்போதும் கருப்பசாமி மனைவியிடம் தகராறு செய்தார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தாயை தகாத வார்த்தைகளால் பேசுவதை மகன் கண்டித்தார்.

இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி மகன் என்றும் பாராமல் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து சச்சின்குமாரை வெட்ட முயன்றார். அதிர்ஷ்டவசமாக சச்சின்குமார் உயிர் தப்பினார்.

இதனையடுத்து தந்தையிடம் இருந்த அரிவாளை பறித்து தந்தையின் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதைப்பார்த்த அமுதவள்ளி அலறி சத்தம் போட்டார்.

சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். ரத்தவெள்ளத்தில் கிடந்த கருப்பசாமியை சோதனை செய்தபோது அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சென்ன கேசவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திலக், பிரபாகரன், ஏட்டு தங்கவேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை குறித்து கல்லூரி மாணவர் சச்சின்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடிப்பழக்கம் குடும்பத்தை பிரித்தது மட்டுமல்லாமல் கணவர் உயிரையும் பறித்து, மகனை கொலைகாரனாக்கியதால் அமுதவள்ளி அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!