40 வருடங்களுக்கு பிறகு பெற்ற தாயை சந்தித்த மகன்… மணலியில் நெகிழ்ச்சி சம்பவம்


2 வயதில் டென்மார்க் தம்பதியால் தத்தெடுக்கப்பட்ட மகன், 40 வருடங்களுக்கு பிறகு சென்னை வந்து தனது பெற்ற தாயை நேரில் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் மணலியில் நடைபெற்றது.

சென்னை மணலியில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவருடைய மகன்கள் ராஜன், டேவிட். இவர்களில் டேவிட்டுக்கு 2 வயது இருக்கும்போது தனலட்சுமி பல்லாவரத்தில் வசித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக அவர், தனது மகன்களுடன் பல்லாவரத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சில மாதங்கள் தங்கி இருந்தார்.

ஆனால் மற்ற குழந்தைகள் இதை பார்த்து ஏக்கம் அடையும் என்பதால் தனலட்சுமி, தனது மகன்கள் இருவரையும் காப்பகத்தில் விட்டுவிட்டு வெளியேறிவிட்டார். அவ்வப்போது காப்பகத்துக்கு சென்று மகன்களை பார்த்து வந்தார்.

இதற்கிடையில் தமிழகம் வந்த டென்மார்க்கை சேர்ந்த தம்பதிகள், தனலட்சுமியின் மகன்களான டேவிட், ராஜன் இருவரையும் தத்தெடுத்துக்கொண்டு டென்மார்க் சென்றுவிட்டனர். சிலநாட்கள் கழித்து டேவிட்டின் புகைப்படத்தை தனியார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த புகைப்படம் மட்டும் தனலட்சுமியிடம் இருந்தது.

ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 2 வயதில் தாயைவிட்டு பிரிந்து டென்மார்க் தம்பதியுடன் சென்ற டேவிட்டுக்கு தற்போது வயது 42. இதற்கிடையில் 2013-ம் ஆண்டு டேவிட், தனது பெற்ற தாயை தேடி தமிழகம் வந்தார். செ

ன்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு தனியாக சென்று தேடியும் தாயை கண்டுபிடிக்க முடியவில்லை.

தனது சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது தாயை கண்டுபிடிக்க உதவும்படி கேட்டுக்கொண்டார். இதை பார்த்த தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அருண் டோலே என்பவர் அவருக்கு உதவினார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு தற்போது டேவிட்டின் தாயார் தனலட்சுமி, மணலியில் ஒரு சிறு வீட்டில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தனது தாயிடம் முதன்முறையாக வீடியோ கால் மூலம் டேவிட் பேசினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை டேவிட், 40 ஆண்டுகளுக்கு பிறகு தனது பெற்ற தாயை நேரில் சந்திக்க சென்னை வந்தார். அவர், மணலிக்கு சென்று தனது தாயை நேரில் சந்தித்தார். 2 வயதில் தன்னை விட்டு பிரிந்து சென்று, 42 வயதில் திரும்பி வந்த தனது மகனை கண்ட தனலட்சுமி, உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் விட்டு அழுதார்.

மகனை ஆரத்தழுவி முத்தமிட்டார். டேவிட்டும் தனது தாயை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உணர்ச்சி மிகுந்த இந்த காட்சியை பார்த்த அங்கிருந்தவர்கள், நெகிச்சி அடைந்தனர்.

2 வயதிலேயே தமிழகத்தில் இருந்து டென்மார்க் சென்றுவிட்டதால் டேவிட்டுக்கு தற்போது தமிழ் முழுவதுமாக மறந்துவிட்டது. மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் தனது தாயிடம் பேசி வருகிறார். டென்மார்க்கில் வசிக்கும் தனது அண்ணன் ராஜனையும் விரைவில் சென்னை அழைத்து வந்து தனது தாயை நேரில் சந்திக்க வைப்பதாக டேவிட் தெரிவித்தார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!