திருமணமான 2 மாதத்தில் சடலமாக்கப்பட்ட புது மாப்பிள்ளை! சென்னையில் பகீர் தகவல்..!


வேறு சமூக பெண்ணை திருமணம் செய்த இளைஞரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் காரப்பாக்கம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் நிறுவனத்தில் முரளி என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். இவருடைய வயது 28. தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இவர், மேலாதிக்க சாதியை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்த சம்பவமானது மேலாதிக்க சாதியினரை கடுமையாக ஆத்திரமடைய செய்தது. இன்று காலையில் அவர்களுடைய வீட்டிற்கு அருகேயுள்ள தேனீர் கடையில் முரளி தேனீர் அருந்தி கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் ஓடி வந்த மர்ம கும்பல் முரளியை வெட்டி கொலை செய்துள்ளது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் பயந்துபோய் கூச்சலிடவே, மரண கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவமறிந்து விரைந்து வந்த கண்ணகி நகர் காவல் துறையினர் முரளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் முரளி ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற நோக்கத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று உடுமலையில் சங்கர் என்பவர் ஆணவ கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது காரப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!