தி.மு.க.வின் தலைமை ஸ்டாலினிடம் இருக்கும் வரை வெற்றி கிடைக்காது – மு.க அழகிரி அதிரடி..!


ஆர்.கே நகரில் தி.மு.க தோற்றது, தி.மு.க.வின் செயல்பாடு, பணப்பட்டுவாடா, தினகரன் வெற்றி என பல்வேறு விஷயங்கள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி மு.க அழகிரி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

கருணாநிதி தலைமையில் அனைத்து தேர்தல்களிலும் ஜெயித்தோம். ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறப்போவது இல்லை. அவரது தலைமையில் சந்தேகம் எழுகிறது. களப்பணி இல்லாமல் எந்த வெற்றியும் பெற முடியாது. வேனில் இருந்து ஓட்டு கேட்டால் போதாது.

ஆர்.கே நகரில் டெபாசிட் போனதற்கு ஸ்டாலின் காரணம். எனக்கும் அவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சனைகள் வேறு, அரசியல் வேறு. போதிய மேற்பார்வை இல்லாமல் இருக்கும் நிலையில், தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களை பணத்திற்காக விலை போனதாக கூறுவதா?. ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடு சரியில்லை.


வெற்றிப்பாதையில் செல்லவேண்டுமானால் தி.மு.க.வில் தலைமை மாறுதல் தேவை, அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லும் வகையில் தலைமை இருக்க வேண்டும்.

ஆர்.கே நகரில் பிரபல சின்னங்கள் களத்தில் இருந்த நிலையில், புதிய சின்னத்துடன் தினகரன் சுயேட்சையாக இறங்கி வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க மற்றும் அ.தி.மு.க மீதான வெறுப்பே அவரை வெற்றி பெறச்செய்துள்ளது.

தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது என்றாலே திருமங்கலம் பார்முலா என்று கூறுகின்றனர். திருமங்கலம் பார்முலா என்பது கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைத்ததுதான். பணம் மட்டும் தேர்தலில் வெற்றிபெற போதாது.

தேர்தலில் யார் ஜெயித்தாலும் பண நாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது என்று கூறுவது இயல்பானது. தி.மு.க வெற்றிபெற வேண்டுமானால் புதிதாக வருபவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்த வேண்டும். துரோகம் இழைத்தவர்களை நீக்கிவிட்டு பழைய உண்மையான தொண்டர்களுக்கு பதவி அளிக்க வேண்டும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!