பெற்ற குழந்தையை உயிரோடு புதைக்க குழி தோண்டிய தந்தை! நெஞ்சை பதற வைத்த காரணம்!


ஹைதராபாத்தின் கரீம் நகரில் உள்ள ஒரு வெட்ட வெளி பகுதி.. ஆள் நடமாட்டமே இல்லை.. அங்கு பட்டப்பகலில் 2 பேர் மண்ணில் குழி தோண்டி கொண்டிருந்தார்கள். இதை ஒரு ஆட்டோ டிரைவர் கவனித்துள்ளார்.

உற்று பார்க்கும்போதுதான் தெரிந்தது.. அவர்களின் கையில் ஒரு பச்சிளம் குழந்தை இருந்ததை.. அந்த குழந்தை கை, காலை உதைத்து அசைத்து கொண்டிருந்ததை பார்த்ததும் டிரைவர் அதிர்ச்சி அடைந்து பதறி அடித்து கொண்டு ஓடினார். நேராக போய் போலீசில் தகவல் சொல்லவும், அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர்.
வெள்ளை துணியில் சுற்றப்பட்ட குழந்தையுடன் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இன்னொரு வயசானவர், கொஞ்சம் தூரத்தில் நின்றுகொண்டிருந்தார். 2 பேரை பிடித்து விசாரித்தபோதுதான், ஒருவர் குழந்தையின் அப்பா, இன்னொருவர் குழந்தையின் தாத்தா என்று தெரியவந்தது.

எதற்காக குழந்தையை புதைக்கிறீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு, “குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டது” என்றனர். பிறகு, “குழந்தைக்கு உடம்பு சரியில்லை.. ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்தோம்.. ஆனாலும் காப்பாத்த முடியல.. ஆபரேஷன்ல இறந்துபோச்சு.. அதனாலதான் புதைக்க வந்தோம்” என்றனர்.

ஆனால் சுற்றப்பட்டிருந்த அந்த துணியை விலக்கி பார்த்தபோது, குழந்தைக்கு உயிர் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அந்த குழந்தையின் அப்பாவும், தாத்தாவும் ஷாக் ஆகிவிட்டனர். செத்து போச்சுன்னு நினைச்சுட்டு புதைக்க வந்துட்டோம் என்றனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணையை ஆரம்பித்தனர். தொடர் விசாரணையில், குழந்தையின் அப்பா ராஜூவும், அவரது மனைவி மானஸாவும் சங்கேபள்ளி கிராமத்தில் தினக் கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள்.

போன அக்டோபர் 28-ம் தேதிதான் மானஸாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தையின் பிறப்புறுப்பில் கோளாறு இருந்ததால், உடனடியாக ஹைதராபாத் நிலோஃபர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறும் டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால், பிறவியிலேயே இந்த பெண் குழந்தை குறைபாட்டுடன் இருப்பதால் கொன்றுவிடலாம் என்று முடிவு செய்ததே குழந்தையின் அப்பாவும், தாத்தாவும்தான்.

மானஸாவுக்கு உடம்பு இன்னும் குணமாகவில்லை என்பதால் இந்த விஷயமே அவருக்கு தெரிய காணோம். இப்போது குழந்தை காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கே ஐசியூவில் இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்படுகிறது. பிள்ளையை பெற்ற அப்பாவும், அவரை பெற்ற அப்பாவும் இப்போது விசாரணையின் பிடியில் உள்ளனர். பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைக்க போன சம்பவத்தை கண்டு ஹைதராபாத் மக்கள் நடுங்கி போய் உள்ளனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!