4 மாதத்திற்கு முன்பு நடந்த துயரம்… கிணற்றில் விழுந்து இறந்த சுஜித் பெரியப்பா.!


சுஜித் குடும்பத்தில் நான்கு மாதத்திற்கு முன்புதான் ஒரு துயரம் நடந்துள்ளது. அது சுஜித்தின் பெரியப்பா கிணற்றில் விழுந்து பலியான பெரும் சோகம். நான்கு மாதம் கழித்து சுஜித் போர்வெல் கிணற்றில் விழுந்து இறந்ததால் குடும்பமே பெரும் சோகமாக உள்ளது.

விடாமல் துரத்தும் சோகம் என்று சொல்வார்கள். அது சுஜித் குடும்பத்தில் நிஜமாகியுள்ளது. இந்தக் குடும்பத்தில் ஏற்கனவே ஒரு துயரச் சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் சுஜித்தையும் அவர்கள் இழந்துள்ளனர்.

நான்கு மாதங்களுக்கு முன்புதான் சுஜித்தின் பெரியப்பா கிணற்றில் விழுந்து இறந்தார். அதாவது சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜின் பெரியப்பா மகன் ஜான் பீட்டர். இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறையில் கடந்த மே மாதம் ஊருக்கு வந்திருந்தார்.

இவரும் நடுக்காட்டுப்பட்டிதான். பிரிட்டோ வீட்டுக்கு அருகில்தான் இவரது வீடும் உள்ளது. வந்த இடத்தில் வீட்டிலிருந்த கோழி ஒன்று வேகமாக வெளியே ஓடியது. வேகமாக ஓடிய அந்தக் கோழி அருகில் இருந்த திறந்தவெளி கிணற்றில் விழுந்து விட்டது.

இதையடுத்து கயிறு கட்டி ஜான் பீட்டர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். கோழியை மீட்டுக் கொண்டு மேலே வந்தபோது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து விட்டது. இதனால் மேலே இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கிணற்றை மூடி விட்டனர்.

இந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் சுஜித்தை பறி கொடுத்துள்ளது பீட்டர் குடும்பம். அடுத்தடுத்து இரு துயரங்கள், அதுவும் ஒரு பச்சைக் குழந்தையின் மரணம், அதுவும் இருவருமே கிணற்றில் விழுந்து பலியாகியிருப்பது பீட்டர் குடும்பத்தினரை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

ஜான் பீட்டர் இறந்ததும் அந்தக் கிணற்றை மூடியவர்கள், பீட்டர் ஆரோக்கியராஜின் வீட்டுக்கு முன்பு திறந்த நிலையில் கிடந்த போர்வெல்லையும் கவனித்து மூடியிருந்தால் சுஜித் தப்பியிருப்பான். அதில் கவனக்குறைவு ஏற்பட்டதால் இன்று ஒரு பிஞ்சின் உயிர் பறி போயுள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!