சின்ன பெட்டிக்குள் தம்பியின் உடல்… சோகத்தில் மூழ்கிய சுஜித்தின் அண்ணன்.. தாயுடன் தவிப்பு!


தனது தம்பி சுஜித் கடைசி வரை மீளாமலேயே போய் விட்ட சோகத்தில் குழந்தை சுஜித்தின் அண்ணன் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளான்.

பிரிட்டோ ஆரோக்கியதாஸ் – கலாமேரி தம்பதிக்கு 2 மகன்கள். இதில் இளையவன்தான் நாமெல்லாம் நம் முன்பே வாரிக் கொடுத்துள்ள குழந்தை சுஜித். எப்படியாவது வந்து விடுவான் என்ற பெரும் நம்பிக்கையில்தான் அத்தனை பேரும் நேற்று இரவு தூங்கப் போனார்கள். ஆனால் காலையில் துயரச் செய்தியுடன் அத்தனை பேரையும் அழ வைத்து விட்டது குழந்தை.

என்னை மீட்க முடியாத உங்களை விட்டுப் போகிறேன் என்று போய் விட்டான் குழந்தை சுஜித். மீளாத் துயரில் மூழ்கிக் கிடக்கிறது தமிழகம். அடி அடியாக மண்ணுக்குள் புதைந்து போன அந்த சின்னக் குழந்தையை மீட்க முடியாத கையலாகாத நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து வேதனையில் மூழ்கியுள்ளனர்.

குழந்தை சுஜித்தின் மரணச் செய்தி அவனது அண்ணனை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தம்பி திரும்பி வருவான் என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தான். ஆனால் கடைசி வரை தம்பி மீளவேயில்லை என்பது அண்னனை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. அதிர்ச்சிகளை சந்திக்கக் கூடிய வயதில் அவன் இல்லை. எனவே அவனால் தனது உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது என்று கூட தெரியவில்லை.

தம்பியைக் காண முடியாத ஏக்கம் அந்த சிறுவனின் முகத்தில் பட்டுத் தெறிக்கிறது. தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கவலை தோய்ந்த விழிகளுடன் தனது தந்தையின் பிடியில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான் அண்ணன்.. ஒரு பக்கம் கண்ணில் நீரே வற்றிப் போய் கதறிக் கொண்டிருக்கும் தாய்.. உற்றார் உறவினர்களின் சோக அழுகை.. சின்ன பெட்டிக்குள் தம்பியின் உடல்.. யாரும் பார்க்கக் கூடாத காட்சி.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!