சுஜித்தை மீட்க சுரங்கத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர் அஜித்குமார்.. சொன்னது என்ன?


சுஜித்தை மீட்கும் பணியில் நேற்று கடைசி கட்டத்தில் திடீர் மாற்றங்கள் பல நடந்தது. தீயணைப்பு வீரர் அஜித்குமார் என்பவர் நேற்று சுரங்கத்திற்குள் சென்று சோதனை செய்தது இதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சுரங்கத்தின் தன்மை எப்படி இருந்தது என்று அவர் தெரிவித்து இருந்தார்.

கிட்டத்தட்ட 80 மணி நேர போராட்டம் பெரும் தோல்வியில் முடிந்துவிட்டது. ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்த சம்பவம் தமிழகத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

சரியாக நேற்று இரவு 9.55க்கு தீயணைப்பு வீரர் அஜித்குமார் குழிக்குள் இறங்கினார், உடலில் கயிறு கட்டி படிகள் மூலம் குழிக்குள் இறங்கினார். குழிக்குள் இறங்கிய அஜித்குமார் 15 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்து சேர்ந்தார். உள்ளே இருந்து பாறை மாதிரியை அவர் வெளியே கொண்டு வந்தார்.

இதையடுத்துதான் மேலும் குழி தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது. உள்ளே பாறைகள் கடுமையாக இருக்கிறது என்று பாறை மாதிரி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு கிடைமட்டமாக சுரங்கம் அமைப்பது கடினம். அப்படி அமைக்க வேண்டும் என்றால் மேலும் 8 மணி நேரம் கூட ஆகும் என்று அஜித்குமார் கூறி இருக்கிறார். அதேபோல் உட்பகுதியில் இறங்கி மீட்பது கொஞ்சம் கடினம் என்றும் அஜித் குமார் கூறினார்.

இதன்பின் சுஜித்தின் உடல் எப்படி இருக்கிறது என்று குழாய் வழியே பார்க்கப்பட்டது. ஏர் லாக்கில் 88 அடியில் சுஜித் உடல் இருந்தது. அந்த உடல் சிதிலம் அடைந்து, ரத்த காயங்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர்களும் அவரின் ஜூம் செய்யப்பட்ட புகைப்படத்தை பார்த்து உறுதி செய்தனர்.

மேலும் சுஜித் இருந்த குழியில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. தீயணைப்பு வீரர் அஜித்குமார் சொன்னது மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை இரண்டையும் வைத்து மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு, சுஜித் பலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் சுஜித் உடல் ஆழ்துளை கிணற்றின் வழியாகவே மீட்கப்பட்டது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!