சுஜித்தின் பெற்றோருக்கு நடிகர் லாரன்ஸ் உருக்கமான வேண்டுகோள்!


ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப் பெயரிட்டு வளர்த்து வாருங்கள் என்று சுஜித்தின் பெற்றோருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கும் அதிகமான இந்த மீட்பு போராட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் இறுதி சடங்கிற்குப் பிறகு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சுஜித் மரணம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டு சென்று விட்டான் சுஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது.


இந்நிலையில் சுஜித்தின் பெற்றோருக்குச் சொல்ல விரும்புவது..சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் ” அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுஜித்தும் தங்களுடனே இருப்பான்.. அப்படி நீங்கள் குழந்தையை தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

குழந்தை சுஜித்தின் மரணத்தால் ராகவா லாரன்ஸ் இன்று (அக்டோபர் 29 ) தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!